அறிவியல் விதிகளை அலறவிடும் சூரியன்! உலக நாடுகள் சூரியனை குறி வைக்க காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்
பெங்களூர்: சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ நாளை காலை ஆதித்யா எல்1 எனும் விண்கலகத்தை விண்ணில் ஏவ இருக்கிறது. இந்தியாவுக்கு முன்னதாக பல்வேறு நாடுகள் சூரியனை ஆய்வு செய்ய இதுபோன்று வின்கலன்களை அனுப்பியுள்ளன. இதன் மூலம், ஏன் சூரியனை ஆய்வு செய்ய வேண்டும்? என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது. இதற்கு விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவுக்கு மற்றொரு மைல் கல்லாக அமைய உள்ளது ஆதித்யா எல்1 எனும் திட்டம். அதாவது இந்த திட்டத்தின் மூலம் ஏவப்படும் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும்.
பெங்களூரு யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள எஸ்டிஎஸ்சி-ஷார் விண்வெளி நிலையத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டது. அங்கு அனைத்து விதமான சோதனைகளும் நிறைவடைந்த நிலையில் அதை PSLV-C57 ராக்கெட்டுடன் விஞ்ஞானிகள் பொருத்தினார்கள். தற்போது இந்த ராக்கெட் சதீஷ் தவான் ஏவுதளத்தில் ஏவுவதற்கு தயார் நிலையில் இருக்கிறது. இது நாளை காலை திட்டமிட்டபடி 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படும். இதற்கான கவுண்ட்டவுன் இன்று காலை தொடங்குகிறது.
இந்த விண்கலம் பூமியிலிருந்து சூரியனை நோக்கி 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் புள்ளியில் நிலைநிறுத்தப்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 15 கோடி கி.மீ தொலைவு இருக்கிறது. இதில் பூமியின் ஈர்ப்பு விசை சில லட்சம் கி.மீ வரை இருக்கும். அதேபோல சூரியனின் ஈர்ப்பு விசை சில கோடி கி.மீ வரை அதிக ஆதிக்கம் செலுத்தும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட புள்ளிதான் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட்'.
இந்த விண்கலத்தின் முக்கிய நோக்கம் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் குறித்து ஆய்வு செய்வதுதான். இதில் சூரியனிலிருந்து வெளிவரும் காந்த புயல் பூமியில் இருக்கும் அனைத்து மின்னணு சாதனங்களையும் செயலிழக்க வைத்துவிடும் திறன் கொண்டதாகும். இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும்.
அதேபோல இந்த புயலிலிருந்து ஒரேயொரு செயற்கைக்கோள் கூட தப்பிக்காது. எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் இந்த ஆதித்யா L1 எனும் புதிய விண்கலம் அனுப்பப்பட இருக்கிறது. மற்றொரு காரணம் சூரியனில் மேற் பரப்பில் இருக்கும் அதனுடைய காற்று மண்டலம்தான். இதற்கு கரோனா என்று பெயர். இதுதான் விஞ்ஞானிகளை மிகவும் அதிகமாக குழப்புகிறது.
அதாவது வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதிப்படி வெப்பம், அது அதிகமாக இருக்கும் இடத்திலிருந்து குறைவாக இருக்கும் இடத்திற்கு கடத்தப்படும். அதனால்தான் பாத்திரத்தில் ஜில்லென்று இருக்கும் நீர் அடுப்பில் வைத்தவுடன் சூடாகிறது. ஆனால் சூரியனின் மேற்பரப்பு (ஃபோட்டோஸ்பியர் ) வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கிறது. இதன் பின்னர் விண்வெளி தொடங்கி விடுகிறது. விண்வெளி பயங்கர குளிர்ச்சியானது. எனவே சூரியனிலிருக்கும் வெப்பம் வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதிப்படி விண்வெளிக்கு பரவும் போது வெப்பத்தின் அளவு குறைவாக இருக்க வேண்டும்.
அதாவது சூரியனுக்கு வெளியே இருக்கும் அதன் காற்று மண்டலமான கொரோனாவின் வெப்பம் குறைந்துதான் இருக்க வேண்டும். ஆனால் இதன் வெப்ப நிலை 10 லட்சம் டிகிரி செல்சியஸாக இருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்பது தற்போது வரை கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படியெனில் நம்மிடம் இருக்கும் இயற்பியல் விதிகள் தவறா? என்றும் கேள்வி எழுகிறது. இதை கண்டுபிடிக்கதான் உலக நாடுகள் சூரியனை நோக்கி படையெடுத்துள்ளன.
அந்த வகையில் அமெரிக்காவின் பார்க்கர் சோலார் விண்கலம் சூரியனுக்கு சில லட்சம் கி.மீ வரை நெருங்கி சென்று ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்தியாவை பொறுத்த வரை சூரியனை ஆய்வு செய்ய நாம் அனுப்பும் முதல் விண்கலம் ஆதித்யா எல்1தான். எனவே இனி அடுத்து வரும் காலங்களில் அடுத்தடுத்த விண்கலன்கள் ஏவப்படலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications