தடுப்பை தாண்டி "ஒரே ஜம்ப்.." பிரதமரை நோக்கி ஓடிய இளைஞர்! குறுக்கே பாய்ந்த போலீஸ்! கர்நாடகாவில் பரபர
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடக்கிறது. இன்று அங்குச் சென்ற பிரதமர் மோடி பேரணியாக காரில் சென்று கொண்டிருந்த போது யாரும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மிக விரைவில் அங்குத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அங்கு பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தென் மாநிலங்களில் இப்போது கர்நாடகாவில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இதனால் பாஜகவில் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றே பாஜக விரும்புகிறது.

பிரதமர் மோடி
அங்குத் தேர்தலுக்கு நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி கடந்த சில மாதங்களில் பல முறை நேரடியாகக் கர்நாடக மாநிலத்திற்கு வந்துள்ளார். அதன்படி இன்றும் கர்நாடக சென்ற பிரதமர் மோடி, ரூ.4,249 கோடி மதிப்பில் வைட்ஃபீல்ட்- கிருஷ்ணராஜபுரா வரையிலான 13.71 கிமீ தொலைவிலான மெட்ரோ சேவையைத் தொடங்கி வைத்தார். அப்போது பேரணியாகப் பிரதமர் மோடி காரில் சென்று கொண்டிருந்த போது யாரும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தடுப்பைத் தாண்டி குதித்து
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிரதமர் மோடி பேரணியாக காரில் பேரணியாகச் சென்ற நிலையில், மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது தாவங்கேரி என்ற இடத்தில் பிரதமர் மோடி வந்த நேரம் இளைஞர் ஒருவர், திடீரென தடுப்புகளைத் தாண்டி குதித்தார். பிரதமர் மோடியை நோக்கி வேகமாக ஓடிய அந்த இளைஞரை அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

விசாரணை
கர்நாடகாவில் பிரதமர் மோடியின் பேரணியின் போது இளைஞர் அத்துமீறி நுழைய முயல்வது இது முதல்முறை இல்லை.. ஏற்கனவே, கடந்த முறை இங்கே வந்த போது, ஹுப்பள்ளி மாவட்டத்தில் இதேபோன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. தடுப்பைத் தாண்டி குதித்த அந்த நபர், கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ
இந்தச் சம்பவத்தின் வீடியோவும் இணையத்தில் வெளியாயுள்ளது. அதில் தடுப்பைத் தாண்டி குதித்து பிரதமர் நோக்கி அந்த இளைஞர் செல்ல முயல்கிறார். அப்போது மூத்த போலீஸ் அதிகாரி அலோக் குமார், ஓடி வந்து அந்த இளைஞரைத் தடுத்து நிறுத்தினார். மேலும், பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) கமாண்டோவும் ஓடி வந்து அவரை நிறுத்துகிறார். இது இரண்டும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

நடவடிக்கை
இது தொடர்பாக அந்த இளைஞரைப் பிடித்த அதிகாரி அலோக் குமார் கூறுகையில், "இதைப் பாதுகாப்பு என்று சொல்ல முடியாது. அதற்கான முயற்சி நடந்தது. நாங்கள் தடுத்துவிட்டோம். எஸ்பிஜி அதிகாரியும் அந்த இளைஞரைப் பிடித்தார். அந்த நபர் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த பசவராஜ் கடகி என அடையாளம் காணப்பட்டுள்ளது. பிரதமர் மோடியைப் பார்க்க அவர் இப்படிச் செய்துள்ளார். அங்கு அதிகப்படியான கூட்டம் சேர்ந்ததால் தடுப்பைத் தாண்டி இவர் குதித்துள்ளார். அவர் சட்டத்தை மீறியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

முதல்முறை இல்லை
கர்நாடகாவில் முன்னதாக கடந்த ஜனவரி மாதம்,ஹுப்பள்ளியில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அந்த சிறுவன் பிரதமர் மோடிக்கு மிக அருகே நெருங்கிவிட்டார். அந்த சிறுவனுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே ஒரு சில மீட்டர் மட்டுமே இடைவெளி இருந்தது. அப்போது கடைசி நிமிடத்தில் எஸ்பிஜி வீரர் அவரை தடுத்து நிறுத்தினார். இப்போது மீண்டும் அதேபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications