மகனுக்கு சீட் நஹி விரக்தியில் தேர்தல் அரசியலுக்கு முழுக்கு போட்ட ஈஸ்வரப்பா-வாழ்த்து சொன்ன அண்ணாமலை!
பெங்களூர்: கர்நாடகா பாஜக மூத்த தலைவரான ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலுக்கு முழுக்கு போடுவதாக திடீரென அறிவித்துள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் ஈஸ்வரப்பாவின் அறிவிப்பு பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் கர்நாடகா மாநில இணை பொறுப்பாளரான தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஈஸ்வரப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது விவாதமாகி இருக்கிறது.
கர்நாடகா மாநில பாஜக தலைவராக இருந்தவர் கே.எஸ். ஈஸ்வரப்பா. தற்போதைய கர்நாடகா அரசில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2012-13-ல் கர்நாடகா மாநில துணை முதல்வராகவும் இருந்தார்.

கர்நாடகா அரசியலில் சர்ச்சையான கருத்துகளை தெரிவிப்பவர்களில் ஈஸ்வராவுக்கும் தனி இடம் உண்டு. ஈஸ்வரப்பா அமைச்சராக இருந்த போது சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார். ரூ4 கோடி பணிகளுக்கு 40% கமிஷன் கேட்டார் ஈஸ்வரப்பா என்பது தற்கொலை செய்த ஒப்பந்ததார்ர் எழுதி வைத்த குறிப்பு. இதனால் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் ஈஸ்வரப்பா. ஆனால் போலீஸ் விசாரணையில் ஈஸ்வரப்பா குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஈஸ்வரப்பா தமக்கு அல்லது மகன் கந்தேஷுக்கு ஷிவமோகா தொகுதியை கேட்டு அடம்பிடித்து வருகிறார். ஆனால் ஷிவமோகா தொகுதியில் ஈஸ்வரப்பா அல்லது அவரது மகன் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியிடுவேன் என பாஜக எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்த அயனூர் மஞ்சுநாத் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இதனிடையே டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி மன்ற குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கர்நாடகா சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கர்நாடகா அரசியல் தலைவர்களின் வாரிசுகள் ஒருவருக்கு கூட சீட் தரக் கூடாது என பிரதமர் மோடி கறாராக சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில்தான் ஈஸ்வரப்பா இன்று திடீரென தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தலைவர் நட்டாவுக்கு அனுப்பிய கடிதத்தில் பூத் பொறுப்பாளர் பணி தொடங்கி மாநில தலைவராக, அமைச்சராக, துணை முதல்வராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
தமக்கும் மகனுக்கும் இந்த தேர்தலில் நிச்சயம் நீட் கிடைக்காது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே விரக்தியில் தேர்தல் அரசியலுக்கு முழுக்கு போடுவதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஈஸ்வரப்பாவுக்கு தமிழ்நாடு பாஜக தலைவரும், கர்நாடகா மாநில பாஜக மேலிட பொறுப்பாளர்களில் ஒருவருமான அண்ணாமலை வாழ்த்து தெரிவித்திருப்பது புதிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா தேர்தலில் அண்ணாமலை குறிப்பிட்ட வேட்பாளர்களை பரிந்துரைத்ததாகவும் அப்படி அவர் பரிந்துரைக்கும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் பாஜகவினர் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications