தனிநாடு விவகாரம்: வீட்டுக்கு வர்ரேன்..சுட்டுக் கொல்லுங்க..பாஜக ஈஸ்வரப்பாவுக்கு காங். எம்பி சவால்
பெங்களூர்: தென்மாநிலங்கள் இணைந்து தனிநாடு கோரும் என பேசியதற்காக கர்நாடகா காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷை சுட்டுக் கொல்ல வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஈஸ்வரப்பா வீட்டுக்கு தாமே செல்வதாகவும் தம்மை அவர் சுட்டுக் கொலை செய்யட்டும் என டிகே சுரேஷ் சவால் விடுத்துள்ளார்.
மத்திய பட்ஜெட் கடந்த 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது குமுறல். இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ், தென் மாநிலங்கள் வரி வருவாயை இந்தி பேசும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தாரை வார்த்து கொடுக்கிறது. இந்த நிலைமை தொடருமேயானால் தென்னிந்திய மாநிலங்கள் தனிநாடு கோரும் நிலைமை உருவாகும் என எச்சரித்திருந்தார். இது தேசிய அளவில் பெரு, விவாதங்களை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியும் இதற்கு விளக்கம் தந்திருந்தது. இந்த நிலையில் கர்நாடகா பாஜகவின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, டிகே சுரேஷ் எம்பி பிரிவினைவாதம் பேசுகிறார். அவரை எல்லாம் சுட்டுக் கொலை செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இது புதிய பிரச்சனையாக வெடித்துள்ளது.
இது தொடர்பாக டிகே சுரேஷின் சகோதரரும் கர்நாடகா துணை முதல்வருமான டிகே சிவகுமார் கூறுகையில், எங்கள் அப்பாவை பற்றி இதற்கு முன்னர் ஈஸ்வரப்பா அவதூறாகப் பேசியிருந்தார். அப்போது நாங்கள் சரியான பதிலடியை ஈஸ்வரப்பாவுக்கு கொடுத்திருந்தோம். தைரியம் இருந்தால் டிகே சுரேஷை ஈஸ்வரப்பா சுட்டுக் கொல்லட்டுமே.. இதற்கு எல்லாம் அஞ்சுகிறவர்கள் நாங்கள் அல்ல. எங்கள் உடம்பில் எதனையும் எதிர்கொள்ளும் தைரியம் உள்ள ரத்தம்தான் ஓடுகிறது. ஈஸ்வரப்பாவுக்கு எங்கள் தரப்பில் சரியான பதில்டி மீண்டும் தருவோம் என்றார்.
ஈஸ்வரப்பா மிரட்டல் குறித்து கருத்து தெரிவித்த டிகே சுரேஷ் எம்பி, என்னை சுட்டுக் கொல்வதாக பேசியிருப்பதால் பாஜக தலைமை ஈஸ்வரப்பாவுக்கு ஆளுநர் பதவி தரக் கூடும். நான் யாரையுமே தூண்டிவிடப் போவது இல்லை. ஈஸ்வரப்பா வீட்டுக்கு நானே செல்கிறேன். அவருக்கு தைரியம் இருந்தால் என்னை சுட்டுக் கொல்லட்டுமே என்றார். மேலும் மகாத்மா காந்தியடிகளை படுகொலை செய்தவர்களுக்கு, கர்நாடகாவுக்காக குரல் கொடுத்த என்னை படுகொலை செய்வது பெரிய விஷயம் அல்ல.. மாநிலத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகத்தானே குரல் கொடுத்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications