‛‛சென்னைக்கு செக்’’.. மங்களூர்-பெங்களூர் இடையே அமையும் பொருளாதார வழித்தடம்.. சித்தராமையா அறிவிப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் பெங்களூர் மற்றும் மங்களூருக்கு இடையே ஒரு பிரத்யேக பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவது தொடர்பான அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
பெங்களூருக்கு பெரும்பாலான சரக்குகள் சென்னை துறைமுகத்திலிருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன. எனவே, சென்னைக்கு மாற்றாக மங்களூர் துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும் என்பது கர்நாடக மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதில் இருக்கும் முக்கிய சவால் சாலைகள்தான். மங்களூர் தொழில் நகரமாக இருந்தாலும், அங்கிருந்து பெங்களூரை இணைக்கும் சாலைகள் அவ்வளவு தரமானதாக இருப்பதில்லை.

மங்களூரை மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்திருக்கின்றன. பருவமழை காலங்களில் பெய்யும் மழையானது, சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும். எனவேதான் இங்குள்ள சாலைகள் எவ்வளவு தரமானதாக போட்டாலும், சீக்கிரமாகவே பழுதடைந்துவிடுகின்றன. இருப்பினும், இந்த பிரச்னையை சரி செய்துவிட்டால் பெங்களூருக்கும், மங்களூருக்கும் இடையேயான பொருளாதார வழித்தடம் உருவாகிவிடும். மட்டுமல்லாது, மங்களூரிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்வது எளிது.
எனவேதான் இந்த பட்ஜெட்டில் பெங்களூரு மற்றும் மங்களூரு இடையே ஒரு பிரத்யேக பொருளாதார வழித்தடத்தை உருவாக்கும் யோசனையை சித்தராமையா முன்மொழிந்துள்ளார். ஆனால் இந்த முன்மொழிவுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
அதேபோல தட்சிண கன்னடா மாவட்டத்தில் சர்வதேச கப்பல் மற்றும் சுற்றுலா துறைமுகத்தை (ICTP) மேம்படுத்துவதற்கான என்னென்ன இருக்கிறது என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் சித்தராமையா அறிவித்துள்ளார். இந்த ஆய்வை சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் தொடங்கும். இதற்கான நிதி கர்நாடக உள்கட்டமைப்பு திட்ட மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும். அவசியமெனில் கூடுதல் நிதியும் ஒதுக்கப்படும் என்றும் சித்தராமையா கூறியுள்ளார்.
இது தவிர, மங்களூரில் நேத்ராவதி மற்றும் பால்குனி (குருபுரா) நதிகளில் நீர் மெட்ரோ சேவைகளை அறிமுகப்படுத்த மற்றொரு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், இந்த பகுதியின் விரிவான வளர்ச்சி குறித்து மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான முன்மொழிவு இருப்பதாகவும் சித்தராமையா கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மங்களூருவில் உள்ள நெல்லிகை சாலையில் ரூ.35 கோடியில் நவீன விவசாய வளாகம் கட்டப்படும். மங்களூர் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களை ஒருங்கிணைத்து புதிய டவுன்ஷிப்கள் உருவாக்கப்படும். மங்களூரில் ரூ.10 கோடி செலவில் ஹஜ் பவன், உடுப்பியில் போக்குவரத்துத் துறைக்கு தானியங்கி ஓட்டுநர் சோதனைத் தடம், கர்நாடகாவில் ஜெயின் புனித யாத்திரை மையங்களை மேம்படுத்த ரூ.50 கோடி மானியம் ஒதுக்கப்படும்" என்றும் கூறியுள்ளார். இந்த அறிவிப்புகளால் தட்சிண கன்னட மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications