காந்தியையே கொன்னவங்க ‘அவங்க’..! என்ன மட்டும் விட்ருவாங்களா என்ன? ஆர்எஸ்எஸ்ஸை சீண்டிய சித்தராமையா!
பெங்களூர் : சவார்க்கர் பட விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலம் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகள் போராடிவரும் நிலையில் மகாத்மா காந்தியை கொன்ற அவர்கள் என்னை மட்டும் விட்டு விடுவார்களா என்ன என சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தின் போது சவார்க்கரின் படம் வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சுதந்திர தினத்தில் சவார்க்கரின் படம் வைக்கப்பட்டதற்கு கர்நாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்திர அம்மையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
பெரியார் இருக்க சவார்க்கர் ஏன்? தமிழகத்தில் குஜராத் மாடலை நம்பாதீங்க! போட்டு தாக்கிய ஜிக்னேஷ் மேவானி
சவார்க்கரின் படம்
சவார்க்கரின் படம் அதுவும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் வைக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், இனிமேல் இதுபோன்ற சம்பவம் நிகழக் கூடாது என கூறினார். சித்தராமையாவின் இந்த பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் சிடி ரவி, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர், இதனால் சித்தராமையாவுக்கு எதிராக பாஜக ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தன.
சித்ராமையா
இந்நிலையில் நேற்று குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சித்ராமையா பார்வையிட சென்றார் மடிகேரி பகுதியில் அவரது கார் சென்றபோது அங்கு திரண்ட பாரதிய ஜனதா கட்சி, பஜ்ரங் தள், விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் சித்தராமைவுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சவார்க்கர் பட விவகாரம் தொடர்பாக சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும் என முழக்கமிட்டதோடு அவரது கார் மீது முட்டைகள் வீசப்பட்டது.
முட்டை வீச்சு
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியினருக்கும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினருக்கும் இடையே கலவரம் உருவாகும் நிலை ஏற்பட்டது. இதை அடுத்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்து கூட்டத்தினரை கலைத்தனர். தொடர்ந்து சித்திராமையா அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய குடகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐயப்பா, சித்தராமையா மீதான தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் முன்னாள் முதல்வர் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
காந்தியையே கொன்றவர்கள்
இந்த நிலையில் குடகு மாவட்டத்தில் தனக்கு எதிராக பாஜக உள்ளிட்ட அமைப்பினர் நடத்திய போராட்டம் குறித்து கருத்து கூறியுள்ள சித்தராமையா,"அவர்கள் தேசத்தந்தை காந்தியையே கொன்றவர்கள் என்னை மட்டும் விட்டு விடுவார்களா என்ன? காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றார் . அவரது புகைப்படத்தை வைத்து வணங்கி வழிபாடு நடத்துபவர்களிடம் நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்" என கடுமையாக விமர்சித்துள்ளார்.