கர்நாடகா சிஎம் 'நாற்காலிக்கு சண்டை போடும்' சித்து vs டிகேஎஸ் கோஷ்டி.. "வாயை மூடு" உத்தரவால் கலகம்!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவி, துணை முதல்வர் பதவி விவகாரத்தில் ஆளும் காங்கிரஸில் மிகப் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. முதல்வர், துணை முதல்வர் பதவி குறித்து யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது; அப்படி கருத்து தெரிவித்தால் நோட்டீஸ் வரும் என துணை முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவகுமார் எச்சரித்திருந்தார். ஆனால் நாங்க ஏன் வாயை மூடிக் கொண்டே இருக்க வேண்டும்? என முதல்வர் சித்தராமையா கோஷ்டியைச் சேர்ந்த அமைச்சர் ராஜண்ணா, டிகே சிவகுமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது முதலே முதல்வர் பதவி எனும் நாற்காலிக்கான சண்டை தொடங்கியது. கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார்தான் முதல்வர் பதவியை மிகவும் எதிர்பார்த்தார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை முதல்வராக்கியது.

அதாவது கர்நாடகா முதல்வராக சித்தராமையா இரண்டரை ஆண்டுகளும் டிகே சிவகுமார் இரண்டரை ஆண்டுகளும் பதவி வகிக்கலாம் என காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருந்ததாகவும் கூறப்பட்டது. இதனை இப்போதும் சித்தராமையா கோஷ்டி மறுத்து வருகிறது. டிகே சிவகுமாரை சமாதானப்படுத்த துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது.
ஆனால் சித்தராமையா கோஷ்டியோ, துணை முதல்வர் டிகே சிவகுமாரை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்கிறது. இதனை டிகே சிவகுமார் தரப்பு கடுமையாக எதிர்க்கிறது. அப்படி கூடுதல் துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டால் முதல்வர் பதவியை டிகே சிவகுமாருக்குதான் தர வேண்டும் என்கிறது அவரது கோஷ்டி.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிகே சிவகுமாருக்கே முதல்வர் பதவி தரப்பட வேன்டும் என முதல்வர் சித்தராமையா மேடையில் அமர்ந்திருக்கும்போதே ஒக்கலிகா ஜாதி மடாதிபதி வலியுறுத்தியிருந்தது பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து சித்தராமையா, டிகே சிவகுமார் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதன் பின்னர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிகே சிவகுமார், இனி மேல் முதல்வர், துணை முதல்வர் பதவி பற்றி யாரும் பேசக் கூடாது. காங்கிரஸ் தலைவர்கள் யாரேனும் மீறிப் பேசினால் நோட்டீஸ் கொடுப்போம் என்றார். ஆனால் சித்தராமையா கோஷ்டி அமைச்சர் ராஜண்ணா இதனை உடனே நிராகரித்திருக்கிறார். டிகே சிவகுமார் கொடுக்கும் நோட்டீஸுக்கு எங்களுக்கு பதிலளிக்க தெரியும்; நாங்கள் எல்லாம் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்க முடியாது என ஆவேசமாக பேசியிருக்கிறார். முதல்வர், துணை முதல்வர் பதவி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.












Click it and Unblock the Notifications