காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக சித்தராமையா ஒரு மனதாக தேர்வு.. உடனே வாழ்த்து சொன்ன பசவராஜ் பொம்மை
பெங்களூர்: காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக சித்தராமையா அக்கட்சி எம்.எல்.ஏக்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கர்நாடக மாநில ஆளுநரை சந்திக்க புறப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 10-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 13-ந் தேதி எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் 135 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், கர்நாடகாவின் புதிய முதல்வர் யார்? என்பதில் காங்கிரஸ் மேலிடத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டது.

முதல்வர் பதவியை பெறுவதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இருவருமே காங்கிரஸ் தலைமையிடத்தில் முட்டி மோதினர். எனினும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதை சாதகமாக வைத்துக் கொண்ட சித்தராமையா தனது கோரிக்கையில் விடாப்பிடியாக நின்றார்.
எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை வைத்து முடிவு செய்யாமல் கட்சிக்காக உழைத்த எனக்கு காங்கிரஸ் மேலிடம் முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்பது டிகே சிவக்குமாரின் கோரிக்கையாக இருந்தது. இதனால், யாரை அறிவிப்பது என்பதில் காங்கிரஸ் மேலிடத்திற்கும் பெரும் தலைவலி ஏற்பட்டது. மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் எடுத்துக் கூறியும் டிகே சிவக்குமார் தனது கோரிக்கையை கைவிட மறுத்து விடாப்பிடியாக இருந்ததாக தகவல் வெளியானது.
இதனால், கடந்த 5 நாட்களாகவே முதல்வர் விவகாரம் தொடர்பாக கர்நாடகா மட்டும் இன்றி டெல்லியும் அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இன்றி காணப்பட்டது. இழுபறி நீடித்துக் கொண்டே சென்றதால் இந்த விவகாரத்தில் தலையிட்ட சோனியா காந்தி, கட்சியின் நலன் கருதி துணை முதல்-மந்திரி பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும், உங்களின் உழைப்பு என்ன என்று கட்சி நன்றாக புரிந்து கொண்டுள்ளது என்றும், உரிய நேரத்தில் உங்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் எனக்கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து டிகே சிவக்குமார் துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக்கொண்டுள்ளார். சித்தராமையாவிற்கு முதல்வர் பொறுப்பு, டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பொறுப்பு என்ற பார்முலாவிற்கு இருவரும் ஒப்புக்கொண்டதால் இன்று காங்கிரஸ் கட்சி முதல்வர் தேர்வு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து சித்தாராமையா ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து டெல்லியில் இருந்து இருவரும் பெங்களூரு திரும்பினர். பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் மாலை 7 மணி அளவில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் சித்தராமையா, டிகே சிவக்குமார் உள்பட அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.

இந்தக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக சித்தராமையா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தேஷ் பாண்டே, எச்.கே பாட்டீல், எம்.பி பாட்டீல், லட்சுமி ஹெபால்கர் ஆகியோர் சித்தராமையாவை முன்மொழிந்தனர். இதையடுத்து சித்தராமையா ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார்.
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சித்தராமையாவிற்கு கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை வாழ்த்து தெரிவித்துள்ளார். பசவராஜ் பொம்மை தனது ட்விட் பதிவில் கூறுகையில், "கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளர்.












Click it and Unblock the Notifications