ஆர்சிபி அணி ஆலோசகர்களாக டீ வில்லியர்ஸ், கெய்ல்.. வீரராக இணைந்த விராட் கோலி.. ரசிகர்கள் உற்சாகம்!
பெங்களூரு: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியுடன் இணைந்துள்ளார். ஏற்கனவே ஆர்சிபி அணியின் ஆலோசனைக் குழுவில் டீ வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் இருக்கும் நிலையில், விராட் கோலி வீரராக களமிறங்குவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 6 நாட்களே உள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வருகிறது. ஒவ்வொரு நாளும் பயிற்சியாளர்கள், வீரர்கள் கொடுக்கும் பேட்டிகள் ரசிகர்களுக்கு ஐபிஎல் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகிறது.
இதுமட்டுமல்லாமல் அந்தந்த அணி நிர்வாகங்கள் வீரர்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி ரசிகர்களின் உற்சாகத்திற்கு தீனி போட்டு வருகின்றனர்.

ஆர்சிபி அணி
குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புகைப்படங்கள், வீடியோக்கள் மட்டுமல்லாமல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாட்கேஸ்ட்களை பதிவேற்றி வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள ஆர்சிபி அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் ஆர்சிபி அணியுடன் இணையவில்லை.

கிங் விராட் கோலி
தற்போது இரு நாட்களுக்காக குடும்பத்துடன் நேரம் செலவிட்ட விராட் கோலி, மீண்டும் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளார். ஆர்சிபி அணியில் ஏற்கனவே முன்னாள் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், டீ வில்லியர்ஸ் ஆகியோர் இணைந்துள்ளனர். தற்போது விராட் கோலியும் இணையும் பட்சத்தில் ஆர்சிபி அணி பழையபடி உயிர்த்தெழும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கோப்பையை ஏந்த தீவிரம்
அதேபோல் விராட் கோலி பேட்டிங்கில் சிறந்த ஃபார்மில் இருப்பதால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுப்பார் என்று பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆர்சிபி அணி தொடர்ச்சியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் கோப்பையை முதல்முறையாக ஏந்த காத்திருக்கிறது.

தொடக்க வீரர் யார்?
வழக்கம் போல் விராட் கோலி மீண்டும் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஆர்சிபி அணியில் தொடக்க வீரராக டூ ப்ளஸிஸ் - விராட் கோலி இணை எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் நியூசிலாந்து அணியின் ஃபின் ஆலன் அணியில் இருப்பதால், அவரை எப்படி ஆர்சிபி நிர்வாகம் பயன்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications