சசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைக்காலம் முடிந்ததால் விடுதலை செய்ய வேண்டும் என்று சுதாகரன் தரப்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோருடன் சுதாகரனும் சேர்க்கப்பட்டிருந்தார். பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின்படி இவருக்கு 4 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
மேல்முறையீட்டின்போது, உச்சநீதிமன்றமும் சுதாகரனுக்கு, சசிகலா உள்ளிட்டோரை போலவே, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்தது.

90 நாட்கள் சிறை
இந்நிலையில் சிறைக்காலம் முன்கூட்டியே முடிவடைந்து விட்டதால், விடுதலை செய்ய வேண்டும் என சுதாகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக 1997ல் 90 நாட்கள் சிறையில் இருந்து உள்ளேன், எனவே, அதை கணக்கில் எடுத்து என்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ள்ளார்.

பெங்களூர் நீதிமன்றம்
சுதாகரன் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனு பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, நீதிபதி இந்த கோரிக்கையை பரிசீலித்தால் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்.

4 வருட சிறை தண்டனை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 வருட சிறை தண்டனையையும், 10 கோடி அபராதத்தையும் விதித்தது.

சிறையில் சசிகலா
இந்த தீர்ப்பை கர்நாடக ஹைகோர்ட் ரத்து செய்தது. ஆனால் இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு நான்காண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஜெயலலிதா உயிருடன் இல்லாததால் அவர் மீதான வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

சசிகலா ரிலீஸ்
இந்த நிலையில்தான், நன்னடத்தையை காரணம் காட்டி முன்கூட்டியே விடுதலையாக சசிகலா முயல்கிறார். பெங்களூர் நீதிமன்றத்தில் ரூ10 கோடி அபராதம் செலுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் சசிகலா ரிலீஸ் தேதி தெரியும் என்று அவர் தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார். இந்த நிலையில், சுதாகரனும், விடுதலைக்காக மனு போட்டுள்ளார். ஆக மொத்தம், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ளவர்கள் மொத்தமாக வெளியே வரப்போகிறார்கள் என்பது நன்கு தெரிகிறது.












Click it and Unblock the Notifications