மண்டியாவை வளைக்கும் ம.ஜ.த.. அம்பரீஷ் மனைவி சுமலதா ஆவேசம்.. பின்பக்கமாக பாஜக ஆதரவு.. செம ட்விஸ்ட்
பெங்களூர்: கர்நாடக மாநிலம், மண்டியா லோக்சபா தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல நடிகருமான, மறைந்த அம்பரீஷின், மனைவி சுமலதா சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு பாஜக ஆதரவு அளிக்க திட்டமிட்டுள்ளது.
மண்டியா லோக்சபா தொகுதியிலிருந்து, மூன்று முறை எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காங்கிரஸின் முக்கியத் தலைவராக இருந்த, அம்பரீஷ். மத்திய தொலைத்தொடர்புத் துறையின் இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
இதன்பிறகு கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின், மாநில அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

அம்பரீஷ் மனைவி
இந்த நிலையில் 2018ம் ஆண்டு, நவம்பர் மாதம், உடல் நலக்குறைவால், அம்பரீஷ் மரணமடைந்தார். இதன்பிறகு, முன்னாள் நடிகையும், அவரது மனைவியுமான சுமலதா அரசியலில் கால் பதிக்க முடிவு செய்தார். ஆனால், வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் நடுவே ஏற்பட்டுள்ள தொகுதி உடன்படிக்கையின்படி, மண்டியா தொகுதி ம.ஜ.த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

குமாரசாமி மகன்
மண்டியா தொகுதியில் இருந்து, மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், கர்நாடகா முதல்வருமான குமாரசாமியின் மகன் நிகில் கவுடா, போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. நிகில் கவுடா முதல் முறையாக, அரசியலில் காலடி எடுத்து வைத்து இந்த தொகுதியிலிருந்து, போட்டியிட உள்ளார்.
மண்டியா தொகுதியில், ஒக்கலிகர் ஜாதியினர் மிக மிக அதிகம். எனவே மதசார்பற்ற ஜனதா கட்சிக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. நிகில் கவுடா அங்கு போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறுவார், என்று அந்த கட்சி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

ம.ஜ.த திட்டம்
அம்பரீஷும் ஒக்கலிக ஜாதியை சேர்ந்தவர். அவரால்தான் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்து வந்தது. அம்பரீஷ் மறைவுக்குப் பிறகு, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, மண்டியா மாவட்டத்தில், மொத்தமாக கோலோச்ச தொடங்கியுள்ளது. ஒருவேளை, சுமலதா அங்கு போட்டியிட்டால், காங்கிரசுக்கு அது, வலுசேர்க்கும். இதை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி விரும்பவில்லை.

கிண்டல் செய்யும் மஜத
மைசூர் மண்டலம் முழுக்க தங்கள் கட்சி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது ம.ஜ.த தேசியத் தலைவர், தேவகவுடாவின் திட்டம். எனவே சுமலதாவை அவமானப்படுத்தும் வகையில், தேவ கவுடாவின் மகனும், அமைச்சருமான ரேவண்ணா சமீபத்தில் பேட்டியளித்தார். "அது எப்படி கணவர் இறந்த உடனேயே, ஒரு கைம்பெண்ணுக்கு அரசியல் ஆர்வம் வந்துவிடுகிறதோ தெரியவில்லை" என்று கிண்டலாக பேசியிருந்தார். இதனால் கடும் கோபத்தில் உள்ளார் சுமலதா. இதையடுத்து மண்டியாவிலிருந்து, சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

சுமலதா முடிவு
காங்கிரஸ் கட்சியோ மைசூர்-குடகு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்குமாறு, சுமலதாவுக்கு, வேண்டுகோள் விடுக்கிறது. அதேநேரம் ஒக்கலிக ஜாதி பிரமுகரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவரும், தற்போது பாஜகவில் ஐக்கியமாகியுள்ளவருமான எஸ்.எம்.கிருஷ்ணா, சுமலதாவை, சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மண்டியா தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கினால் சுமலதாவுக்கு, பாஜக ஆதரவு அளித்து, தங்கள் கட்சி சார்பில், வேட்பாளரை நிறுத்தாமல் இருக்க முடிவு செய்துள்ளதாக கிருஷ்ணா அப்போது தெரிவித்துள்ளார். இதையடுத்து, வரும் திங்கள்கிழமை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தனது முடிவை அறிவிக்க உள்ளதாக அறிவித்துள்ளார் சுமலதா. இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications