Darshan case: கன்னட நடிகர் தர்ஷன் ஜாமீன் ரத்து! உடனடியாக கைது செய்யவும் உத்தரவு! கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி
பெங்களூர்: ரேணுகாசாமி என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கு (Kannada actor Darshan) கர்நாடக ஐகோர்ட் ஜாமீன் வழங்கியிருந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட நடிகர் தர்ஷன் உட்பட 7 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்துள்ளது. இதையடுத்து தர்ஷன், பவித்ரா கவுடா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவில் உள்ள பிரபல நடிகர்களில் ஒருவர் தர்ஷன். இவர் தனது ரசிகன் ரேணுகாசாமி என்பவரைக் கடத்தி கொலை செய்ததாகக் கடந்தாண்டு புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்ஷன் ஜாமீன் ரத்து
முன்னதாக இந்த வழக்கில் கர்நாடக ஐகோர்ட் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட 7 பேருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது. இதற்கிடையே இந்த ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பர்திவாலா, மகேந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கன்னட நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நடிகர் தர்ஷன் உள்ளிட்ட 7 பேரின் ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களை உடனடியாகக் கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குழப்பமானது என்றும் முற்றிலும் தேவையற்றதும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், உயர் நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவில் சட்டக் குறைபாடுகள் இருப்பதாகவும், இது தன்னிச்சையான நடைமுறை என்றும் கூறியது.
சாட்சியங்களை மிரட்டலாம்
இந்த வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்ததாக குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், இது விசாரணை நீதிமன்றத்தின் வேலை என்றும் தடயவியல் ஆதாரங்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகவே இருப்பதாக குறிப்பிட்டனர். சாட்சியங்களை மிரட்ட வாய்ப்புள்ளதாக கூறுவதில் உண்மை இருப்பதால் ஜாமீன் வழங்க எந்த சட்டப்பூர்வ காரணமும் இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். தர்ஷனுக்கு ஜாமீன் வழங்குவது நீதி அமைப்பை சீர்குலைப்பதாக இருக்கும் என குறிப்பிட்டனர்.
சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும்
நீதிபதிகள் மேலும் கூறுகையில், "யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.. சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்பது ஒரு விதி, சலுகை அல்ல.. சிறையில் தர்ஷனுக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படக் கூடாது.. குற்றவாளிகளுக்கு சிறையில் 5 ஸ்டார் ஹோட்டல் வசதிகள் வழங்கப்பட்டால் சிறை கண்காணிப்பாளரை இடைநீக்கம் செய்வோம். சிறையில் அவர் புகைபிடிக்கவோ, மது அருந்தவோ அனுமதிக்கக் கூடாது" என்றனர்.
உடனடியாக கைது
தர்ஷன் வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் ஒரு உதாரணமாக அமையும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், இந்த தீர்ப்பை அனைத்து மாநில அரசுகள் மூலமாக அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் சிறை கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இதில் தர்ஷன் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா ஆகியோரை பெங்களூர் போலீசார் கைது செய்தனர். இந்த உத்தரவு கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications