ராமர் கோவில் திறப்பு நாளில் பெங்களூரில் சம்பவத்துக்கு சதித் திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள்-என்ஐஏ ஷாக்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை தகர்க்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டி இருந்ததாக தேசிய புலனாய்வு ஏஜென்சி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜென்சி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இந்த அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பெங்களூர் ஒயிட்பீல்டு அருகே உள்ள ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் கடந்த மார்ச் மாதம் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்புகளில் மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர். நாட்டையே இந்த குண்டு வெடிப்புகள் அதிர வைத்தன.

இந்த குண்டு வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. விசாரித்தது. மேற்கு வங்க மாநிலத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் முசாவீர் உசேன் சாஜிப், அகமது தாகா ஆகியோர் முதலில் பிடிபட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கூட்டாளிகள் 2 பேர் குறித்த தகவல்களும் கிடைத்தன. அவர்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த பயங்கரவாதிகள் தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
தற்போது ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நிறைவு செய்துள்ளனர். இதனையடுத்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பான என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகையின் முக்கிய அம்சங்கள்:
- கர்நாடகா சிவமொக்காவை சேர்ந்த முசாவீர், அப்துல் மதீன் இருவரும் சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டவர்கள்.
- வங்கதேச நாட்டின் அடையாள அட்டைகளையும் பயங்கரவாதிகள் வைத்திருந்தனர்.
- அயோத்தி ராமர் கோவில் திறப்பின் போது கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி பெங்களூர் பாஜக தலைமை அலுவலகத்தை குண்டு வைத்து தகர்க்கவும் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டி இருந்தனர்.
- பாஜக தலைமை அலுவலகத்தை தகர்க்க முடியாமல் போனதால் ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இவ்வாறு தேசிய புலனாய்வு ஏஜென்சியின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications