தந்தை புகைத்து போட்ட பீடி துண்டால் பறி போன 10 மாத ஆண் குழந்தை உயிர்! பெற்றோர்களே கவனம்
பெங்களூர்: சிறு குழந்தைகளை வீட்டில் வைத்து இருக்கும் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளை கண்காணிப்பதோடு, பெற்றோரின் அஜாக்கிரதையும் குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது உதாரணமாக மங்களூரில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. தந்தையின் அஜாக்கிரதையால் ஒரு வயது கூட ஆகாத குழந்தையின் உயிர் பறிபோயுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூர் டவுன் அடையாறு அருகே பீகாரை சேர்ந்த ஒரு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு அனீஷ் குமார் என்ற 10 மாத மகன் இருந்தான். சிறுவனின் தந்தை திருமண விழா அலங்கார பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பீடி புகைக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

பீடித்துண்டு சிக்கி மூச்சுத்திணறல்
பீடி புகைப்பதற்கு அடிமையாய் இருந்துள்ள இவர், பீடியை புகைத்துவிட்டு மீதம் உள்ள துண்டு பீடியை வீட்டில் இருக்கும் இடத்திலேயே போட்டுள்ளார். இதனையே இவர் வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்றும் அவர் பீடி புகைத்துவிட்டு மீது துண்டு பீடியை வீட்டில் போட்டுள்ளார். இதை வீட்டில் இருந்த 10 மாத குழந்தை அனீஷ் குமார் எடுத்து வாயில் போட்டு விழுங்கியுள்ளது.
இதில் குழந்தையின் தொண்டையில் பீடித்துண்டு சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் - தந்தை உடனடியாக குழந்தையை மீட்டு மங்களூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கணவர் மீது மனைவி புகார்
குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுத தாய், இந்த சம்பவம் குறித்து மங்களூர் புறநகர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறுகையில், என் கணவரிடம் அடிக்கடி நான் சொல்லியிருக்கிறேன்.. வீட்டில் பச்சை குழந்தை இருக்கிறது. இப்போது தவழ்ந்து நடைபழகும் என்பதால், கீழே கிடப்பதையும் எடுத்து வாயில் போடுகிறது.
நீங்கள் பீடித் துண்டை இப்படி போட்டால் குழந்தை வாயில் எடுத்து வைத்து விடுகிறான் என்று சொல்லியிருக்கிறேன். ஏற்கனவே ஒருமுறை இப்படித்தான் கீழே கிடந்த பீடித்துண்டை எடுத்து குழந்தை வாயில் போட்டது. நான் உடனே கவனித்ததால் தடுத்துவிட்டேன். இப்போது என் குழந்தை உயிரிழந்ததற்கு கணவரின் அலட்சியப் போக்கே காரணம் என்று கூறியிருந்தார்.
போலீசார் விசாரணை
மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை செய்த அலட்சிய செயலால் 10 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. புகைப் பிடித்தால் உடல்நலனுக்கு கேடு என்று அனைவருக்கும் தெரிந்ததே.. ஆனால் மங்களூரில் மகனின் உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications