முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்.. சர்ச்சைப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஒக்கலிகா மடாதிபதி!
பெங்களூர்: இந்தியாவில் முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்று தாம் பேசியதற்காக கர்நாடகாவை சேர்ந்த ஒக்கலிகா கவுடா ஜாதி மடாதிபதி சந்திரசேகரநாத் சுவாமி மன்னிப்பு கோரியுள்ளார். வக்ஃப் வாரிய சொத்து விவகாரத்தில் விவசாயிகளுக்கு கர்நாடகா காங்கிரஸ் அரசு நோட்டீஸ் அனுப்பியதைக் கண்டித்து பெங்களூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சந்திரசேகரநாத் சுவாமி, முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என பேசியதால் சர்ச்சை வெடித்தது.
கர்நாடகாவின் விஜயாப்புரா, யாதகிரி மாவட்டங்களில் விவசாயிகளுக்கு மாநில காங்கிரஸ் அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதில் உங்கள் நிலம் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது; இந்த நிலத்தை உடனே காலி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கர்நாடகா விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக போராட்டங்களை நடத்தி வருகிறது.

கர்நாடகா காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று முன் தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒக்கலிகா கவுடா ஜாதி மடாதிபதி சந்திரசேகரநாத் சுவாமி, ஓட்டுகளைப் பெறுவதற்காகவே இப்படி அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர். இந்தியாவுக்கு நல்ல பெயர் வரவேண்டும் என நினைத்தால் முதலில் முஸ்லிம்களின் வாக்குரிமையை பறித்துவிட வேண்டும். வக்ஃபு வாரியத்தையே ரத்து செய்ய வேண்டும் என்றார். ஒக்கலிகா கவுடா மடாதிபதி சந்திரசேகரநாத் சுவாமியின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து ஒக்கலிகா கவுடா மடாதிபதி சந்திரசேகரநாத் சுவாமி தமது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக சந்திரசேகரநாத் சுவாமி கூறுகையில், முஸ்லிம்கள் குறித்து நான் பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நான் வாய் தவறி பேசிவிட்டேன். அப்படி நான் பேசியது முஸ்லிம் மக்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வருத்தமும் தெரிவிக்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் பேசவும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications