பாஜக அரசில் 40% தான் கமிஷன்.. இப்போ அதைவிட மோசம்! கர்நாடகாவில் சொந்த கட்சியை விளாசும் காங். தலைவர்
பெங்களூர்: கர்நாடகாவில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரே அவரது கட்சி மீது ஊழல் புகாரை முன்வைத்துள்ளார்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

ஆட்சியில் இருந்த பாஜகவால் வெறும் 66 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அதன் பிறகு கர்நாடக முதல்வராகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா பொறுப்பேற்றார்.
ஊழல் புகார்: தேர்தல் சமயத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தது. அப்போது ஆட்சியில் இருந்த பாஜக மீது பல்வேறு புகார்களை முன்வைத்தனர். குறிப்பாக பாஜக ஆட்சியில் அனைத்து அரசுத் திட்டங்களுக்கும் 40 % கமிஷன் வாங்குவதாகச் சாடினர். இதனால் அரசு ஒப்பந்தங்களை எடுப்போர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தனர்.
இதுவும் காங்கிரஸ் வெற்றிக்குப் பெரியளவில் உதவியது. இதற்கிடையே இப்போது அதே ஊழல் புகார் தற்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் மீது எழுந்துள்ளது. அதுவும் கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சிவராமு தனது சொந்த கட்சி மீதே ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
40% கமிஷன்: கர்நாடகாவில் முன்பு இருந்த பாஜக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று காங்கிரஸ் விமர்சித்த நிலையில், இப்போது நிலைமை மேலும் மோசமாகிவிட்டது என்று சிவராமு கூறினார். 2023ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சமயத்தில் பாஜக அரசைக் விமர்சிக்கும் வகையில் 40 சதவீத கமிஷன் அரசு என்ற குற்றச்சாட்டைக் காங்கிரஸ் எழுப்பி இருந்தது.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நான் இதை நேரடியாக முதலமைச்சரிடமும் கூறியிருக்கிறேன். எனது ஹாசன் மாவட்டத்தில் இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் கேட்ட பெயர் ஏற்படுகிறது. பாஜக காலத்தில், அனைத்து திட்டங்களுக்கும் அவர்கள் 40% கமிஷன் வாங்கி ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டினோம்.. ஆனால், இப்போது நிலைமை அதை விட மோசமாக உள்ளது" என்று அவர் விமர்சித்துள்ளார்.
தீர்வு காண வேண்டும்: தான் மட்டுமின்றி கட்சி தொண்டர்களும் இந்த புகாரால் கட்சியின் நற்பெயருக்குத் தீங்கு ஏற்படுவதாகக் கருதுவதாகவும் இதனால் இந்த ஊழல் பிரச்சினைக்கு உடனடியாக தலைமை தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், நான் இதை நேரடியாகவே கூறுகிறேன்.. அது நான் மட்டுமல்ல... கடந்த ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தலில்.. தோல்வியடைந்த பெரும்பாலான வேட்பாளர்கள் இதையே தான் கூறுகிறோம்.. கட்சி நிலைத்து நிற்க, இதற்கு தீர்வு காண வேண்டும். இதைப் பற்றி நான் வெளிப்படையாகப் பேசினால், நான் கெட்டவன் என்று முத்திரை குத்தப்படுவேன்" என்று சிவராம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications