20ம் தேதி நடக்க இருந்த திருமணம்.. இனிமையாக நடந்த போட்டோ சூட்.. இறுதியில் இப்படியா நடக்கணும்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் இன்னும் 11 நாளில் திருமணம் நடைபெற இருந்தது ஒரு இளம் ஜோடிக்கு.. பெற்றோர்கள் பேசி முடிவு செய்திருந்த திருமணம் இனிதே நடைபெற்று இருக்க வேண்டும். மனமகிழ்ச்சியுடன் புதுஜோடி, திருமணத்திற்கு முந்தைய போட்டோ சூட் எடுத்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்று விதவிதமாக இருவரும் போஸ் கொடுத்து போட்டோ சூட் நடத்தினார்கள். பின்னர் இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தார்கள்.. அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத நிகழ்வு நடந்தது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டத்தில் கனுமனகட்டே என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் 26 வயதாகும் கரியப்பா மடிவாளா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதன்படி கொப்பல் மாவட்டம் காரடகி தாலுகா முஸ்டூரு கிராமத்தை சேர்ந்த 19 வயதாகும் கவிதா என்பவரை பேசி முடித்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, இருவரின் பெற்றோரும் திருமணத்திற்கு நாள் குறித்தனர்.

கொப்பல் டவுனில் வருகிற 20-ந் தேதி திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் கரியப்பாவின் அண்ணன் ரமேசுக்கும், அதேநாளில் திருமணம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு இன்னும் 2 வாரங்களே இருந்ததால், கரியப்பா, கவிதா ஆகியோர் திருமணத்துக்கு முந்தைய 'போட்டோ சூட்' நடத்துவதற்கு முடிவு செய்திருந்தார்கள். தற்போதைய நிலையில் போட்டோ சூட் என்பது திருமணத்தின் அங்கமாகவே மாறிவிட்டதால், பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படித்தான் கரியப்பா கவிதா ஜோடியும் ஆர்வமாக இருந்தனர்.
இதற்கு 2 பேரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் 7ம்தேதி பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே, உம்னாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விதவிதமாக போஸ் கொடுத்து கரியப்பாவும், கவிதாவும் போட்டோ எடுத்து மகிழ்ந்துள்ளார்கள்.
ஆனால் அவர்களின் மகிழ்ச்சி அன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது. 'போட்டோ சூட்' எடுத்து முடிந்ததும் வருங்கால மனைவியை, அவரது வீட்டில் கொண்டுபோய் விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் கரியப்பா அழைத்து சென்றார். நேற்று முன்தினம் இரவு கங்காவதி அருகே சிக்கபெனகல் கிராமம் வழியாக 2 பேரும் பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

எமனாக வந்த லாரி
அப்போது சாலையோரம் பழுதாகி ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அதையடுத்து கரியப்பா பைக்கை சற்று தள்ளி நடுரோட்டில் ஓட்டியபடி சென்றார். அந்த சமயத்தில் எதிரே வந்த மற்றொரு லாரி, எதிர்பாராத விதமாக கரியப்பாவின் பைக் மீது பயங்கரமாக மோதியது. லாரி மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கரியப்பாவும், கவிதாவும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கரியப்பா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதை அறிந்த அவர்களது குடும்பத்தினர் கலங்கினார்கள். திருமண உற்சாகத்தில் இருந்த குடும்பத்தினர் சோகத்தில் இருக்கிறார்கள் இதனிடையே விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications