கர்நாடகாவில் குடியை நிறுத்த நாட்டு மருந்து.. ஒரே நிமிடத்தில் நான்கு பேர்.. எமனாகிய நாட்டு வைத்தியர்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகா இமடாபுரா கிராமத்தை சேர்ந்த சாயப்பா என்று நாட்டு வைத்தியர் என்று கூறிக்கொண்டு, குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காக மருந்து ஒன்றை 4 பேரின் வாயில் ஊற்றி உள்ளார். ஆனால் அந்த மருந்து வேலை செய்யவில்லை மாறாக அவர்களின் உயிருக்கே எமனாக மாறி உள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பயனில்லை.. போலி வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகா இமடாபுரா கிராமத்தில் சாயப்பா என்ற தாயப்பா வசித்து வருகிறார். இவர், நாட்டு வைத்தியர் என்று கூறிக்கொண்டு அங்கிருப்பவர்களுக்கு மருந்து கொடுத்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நாட்டு மருந்துகளை சாப்பிட்டால் குடி பழக்கத்தை கைவிட்டு குணமடையலாம் என்று சாயப்பா பலரிடமும கூறி வந்தார். அதன்படி, சேடம் அருகே புரகபள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமி, சித்தாப்புரா தாலுகா பீமனஹள்ளியை சேர்ந்த மனோகர், சகாபாத் டவுனை சேர்ந்த ராத்தோட், நாகேஷ் ஆகிய 4 பேரும் இமடாபுரா கிராமத்திற்கு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி வந்துள்ளார்கள்.

பின்னர் குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காக சாயப்பா மருந்து கொடுத்துள்ளார். அந்த நாட்டு மருந்தை 4 பேரும் வாங்கி குடித்திருக்கிறார்க்ள அதே நேரத்தில் 4 பேரின் மூக்கு வழியாகவும் நாட்டு மருந்தை சாயப்பா ஊற்றியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, திடீரென்று 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் நலக் கோளாறு பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக 4 பேரும் கலபுரகி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவே லட்சுமி, கணேஷ் ராத்தோட் உயிரிழந்தனர்.
மனோகர், நாகேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர்களும் நேற்று அதிகாலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். இதனால் குடிப்பழக்கத்தை நிறுத்த நாட்டு மருந்து சாப்பிட்ட நான்கு பேரும் பலியாகி உள்ளனர்.
இந்த சம்பவம் கலபுரகியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து சேடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சாயப்பா போலி நாட்டு வைத்தியர் என்பதும் உறுதியானது. இதையடுத்து போலி நாட்டு வைத்தியரான சாயப்பாவை கைது செய்ய தீவிரம் காட்டினார்கள். அப்போது தெலுங்கானா மாநிலத்தில் அவர் தலைமறைவாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
உடனே நேற்று காலையில் சேடம் போலீசார், தெலுங்கானா விரைந்தனர். பின்னர் தனது தங்கையின் வீட்டில் பதுங்கி இருந்த சாயப்பாவை கைது செய்தார்கள். அவரை, சேடம் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சாயப்பா கொடுத்த நாட்டு மருந்து விஷமாக மாறி 4 பேர் பலியானதாக சொல்லப்படுகிறது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் 4 பேருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications