"நாட்டிற்கே பெரிய அவமானம்!" இந்திய சிரப்பால் காம்பியாவில் மரணங்கள்! இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேதனை
பெங்களூர்: இந்தியாவின் மருத்துவத் துறை வளர்ச்சி அடைந்தாலும் கூட, இத்துறையில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி கூறியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் மருந்து உற்பத்தித் துறையில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் தான் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
கொரோனா காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வேக்சின்கள் தான் உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. அந்தளவுக்கு மருந்து சந்தையில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது.
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி
இந்தச் சூழலில் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறியுள்ள கருத்துள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பெங்களூரில் இன்ஃபோசிஸ் அறக்கட்டளை சார்பில் ஆறு பேருக்கு இன்ஃபோசிஸ் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவர்களுக்கு (இந்திய மதிப்பில் 80 லட்சம்) பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நாராயண மூர்த்தி இந்தியா மருத்துவத் துறையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்தார்..
பேச்சு
அவர் மேலும் பேசுகையில், "கொரோனா காலத்தில் நமது நாடு 100 கோடி வேக்சினை தயாரித்துக் கொடுத்து உலகையே காப்பாற்றியது. நமது நாட்டை சேர்ந்த பல ஆய்வாளர்களுக்குச் சர்வதேச விருதுகளும் கிடைத்து உள்ளன. இப்படி பல்வேறு ஊக்கமளிக்கும் நிகழ்வுகள் நடந்து உள்ளன. இவை இந்தியா முற்றிலும் வளர்ச்சிப் பாதையில் உள்ளதைக் காட்டுகிறது.. ஆனால் இன்னும் கூடநமக்கு பெரிய சவால்கள் உள்ளன.
கல்வி நிறுவனங்கள்
2020ல் அறிவிக்கப்பட்ட உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 250 இடங்களில் இந்திய உயர்கல்வி நிறுவனம் ஒன்று கூட இல்லை. நாம் தயாரித்த வேக்சின்கள் கூட வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது தான். ஆராய்ச்சி துறையில் நாம் இன்னும் பின்னால் தான் இருக்கிறோம். கடந்த 70 ஆண்டுகளாக நம்மைப் பாதித்து வரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவுக்கு இன்னும் கூட நாம் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கவில்லை.
அவமானம்
ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப் காரணமாக 66 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். இது நம் நாட்டிற்கு நினைத்துப் பார்க்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.. மேலும், நமது மருந்து ஒழுங்குமுறை நிறுவனத்தின் நம்பகத்தன்மையைக் குலைத்துள்ளது. சிறு வயதில் நமது நாட்டில் குழந்தைகள் யாரும் ஆராய்ச்சியில் ஆர்வம் செலுத்துவதில்லை. இதான் முக்கிய பிரச்சினைகளில் தீர்வு காண்பதில் சிக்கல் தொடர்கிறது.
ஆராய்ச்சி
உயர்கல்வி நிறுவனங்களில் போதிய நவீன ஆராய்ச்சி உள்கட்டமைப்பும், போதிய நிதி உதவியும் கிடைப்பதில்லை. இதுவே ஆராய்ச்சி துறையில் நாம் பின்தங்கி இருக்கக் காரணம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களுடன் அறிவைப் பகிரவும் இங்கு போதிய வாய்ப்புகள் இல்லை. புதிய கண்டுபிடிப்புகளுக்கு எப்போதுமே நிதி முக்கிய பிரச்சினையாக இருப்பதில்லை.
இரண்டு விஷயங்கள்
ஆராய்ச்சியில் நாம் வெற்றி பெற இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. முதலில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், பாடங்களை மனப்பாடம் செய்து தேர்ச்சி பெறும் முறையா மாற்றி, மாணவர்களைக் கேள்வி கேட்க கற்றுத் தர வேண்டும். உலக பிரச்சினைகளுடன் தொடர்புப்படுத்தி கற்றல் இருக்க வேண்டும். இரண்டாவதாகத் தற்கால பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நாம் சொல்லித் தர வேண்டும்" என்றார்.