சொந்த வீடு, சொத்து இருக்கா? வந்தாச்சு UPOR கார்டு.. என்ன பலன் கிடைக்கும் தெரியுமா? பெங்களூரில் அமல்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் அனைத்து வீடு மற்றும் சொத்தின் உரிமையாளர்களுக்கும் தனியாக அடையாள எண்ணை வழங்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
இந்தியாவில் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகப் பெங்களூர் இருக்கிறது.. நாட்டின் ஐடி ஹப்பாகவும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமையிடமாகவும் பெங்களூர் இருக்கிறது. இதனால் பலரும் பெங்களூரை நோக்கிப் படையெடுக்கிறார்கள்.

இதன் காரணமாகவே பெங்களூரில் ரியல் எஸ்டேட் மார்கெட் தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. அங்கே சமீபத்தில் கூட பிஜி மற்றும் ஹாஸ்டல் ரூம்களின் வாடகையும் கூட அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர்: இதனிடையே பெங்களூரில் நில உரிமையாளர்களுக்குத் தனித்துவமான நிலச் சொத்து அடையாள எண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெங்களூரில் உள்ள நான்கு லட்சத்துக்கும் அதிகமான உரிமையாளர்கள் ஏப்ரல் மாதம் வரை நகர்ப்புற சொத்து உரிமைப் பதிவுகள் (UPOR) திட்டத்தின் கீழ் தனித்துவமான நிலச் சொத்து அடையாள எண் கொண்ட டிஜிட்டல் மற்றும் புவிசார்ந்த சொத்து அட்டைகளைப் பெற்றுள்ளனர்.
வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் இந்த UPOR அட்டையில் சொத்து தொடர்பான அனைத்து விவரங்களும் இருக்கும்.. பெங்களூரு மாநகர எல்லைக்குட்பட்ட 25 லட்சம் சொத்துக்களுக்கும் இதுபோன்ற அடையாள எண்களை வழங்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். சர்வே செட்டில்மென்ட் மற்றும் லேண்ட் ரெக்கார்ட்ஸ் (SSLR) பணியாளர்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பணிகள் படுவேகம்: இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த திட்டம் 2022இல் தொடங்கப்பட்டது. ட்ரோன் ஆய்வு மூலம் எடுக்கப்பட்ட படங்களைப் பயன்படுத்தி எல்லைகள் அடையாளம் காணப்பட்டன. 198 வார்டுகளில் 158 வார்டுகளில் கணக்கெடுப்பு முடிந்துவிட்டது, அடுத்த சில மாதங்களில் மீதமுள்ள 40 வார்டுகளிலும் இதேபோன்ற கணக்கெடுப்பு நடத்தப்படும். இதுவரை சுமார் 15 லட்சம் சொத்துக்களுக்கான ட்ரோன் கணக்கெடுப்பு முடிந்துள்ளது" என்றார்.
UPOR திட்டக் குழு திட்டத்தின் கீழ் சொத்தை அளக்க வரும் சர்வேயர் குறித்து ட்ரோன் ஆய்வுக்குப் பிறகு, சொத்து உரிமையாளர்களுக்கு மெசேஜை அனுப்பிவிடும். அதன்படி, சர்வேயர் வரும் போது உரிமையாளர்கள் தங்கள் சொத்தின் எல்லைகளைக் காட்ட வேண்டும்.. விற்பனைப் பத்திரம், வரி செலுத்திய ரசீது, உடைமை சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்ட லேஅவுட் திட்டத்தின் நகல் உள்ளிட்டவற்றை உரிமையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.
எப்படி வழங்கப்படும்: அதிகாரிகள் ஆவணச் சரிபார்ப்புக்குப் பிறகு ஒவ்வொரு சொத்துக்கும் வரைவு அடையாள அட்டையை வழங்குவார்கள். உரிமையாளர் அந்த வரைவைச் சரிபார்த்து, துணை ஆவணங்களை வழங்கி தேவையான மாற்றங்களைச் செய்யலாம். ஆவணத்தை அந்த உரிமையாளர் சரிபார்த்த பின்னர் 30 நாட்களுக்குள் உரிமையாளருக்குச் சொத்து அடையாள அட்டை வழங்கப்படும்.
இந்த UPOR என்பது டிஜிட்டல் இ-கட்டாவிலிருந்து வேறுபட்டதாகும்.. சொத்தின் மீது வரி வசூலிக்க மட்டுமே அதிகாரிகள் கட்டாவை பராமரிக்கின்றனர். இ-கட்டா வைத்திருப்பது சொத்தின் உரிமையாக மாறாது. ஆனால் UPOR கார்டு, சொத்தின் உண்மையான உரிமையைக் கோர ஓனர்களுக்கு உதவுகிறது.
என்ன பயன்: எனவே, சொத்துக்களை வாங்கும் மற்றும் விற்கும் போது துணைப் பதிவாளர்கள் ஆதாரத்தைக் கேட்பார்கள் என்பதால் இந்த அட்டை உதவியாக இருக்கும்... மேலும், சொத்துக்காக வங்கியில் கடன் வாங்கும் போதும் இந்த அடையாள அட்டை தேவை. மேலும், கட்டிடத்தை மாற்றியமைக்கும் போதும், இந்த அடையாள அட்டை தேவையாகும்.
மேலும், பரம்பரை உரிமைகோரல்களுக்கு விண்ணப்பிக்கும் போதும் இது தேவைப்படும். இதை போலீஸ் மற்றும் நீதிமன்றத்தில் உத்தரவாதமாகப் பயன்படுத்த முடியும்.
இந்த கார்டில் சொத்து எண், சொத்தின் நான்கு மூலைகளையும் உள்ளடக்கிய புவியியல் வரைபடம், உரிமை விவரங்கள், தாய் பத்திரம் முதல் தற்போதைய உரிமையாளர் வரை அனைத்து உரிமையாளர்களின் வரலாறு, ஏற்கனவே உள்ள கடன்களின் விவரங்கள், கட்டுப்பாடுகள் என அனைத்தும் இருக்கும்.












Click it and Unblock the Notifications