புதிய தலைவலி! கர்நாடகாவில் பாஜகவுக்கு பிராமணர்கள் ஆதரவே காலி! பொம்மைக்கு அதிகரிக்கும் சிக்கல்
பெங்களூர்: கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள பிராமண சமூகத்தினரே பாஜகவுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். பசவராஜ் பொம்மை அரசு பிராமணர்களுக்கு எதிரானது என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
கர்நாடகாவில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இப்போதே பாஜக பிரசாரத்தைத் தீவிரப்படுத்திவிட்டது.
இந்தத் தேர்தலில் எப்படியாவது வென்று ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் சந்தோஷப்படுத்தும் வகையில் பாஜக அரசு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.

முன்மொழிவு
மத்திய அரசு கடந்த 2019இல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கிலும் 10% இட ஒதுக்கீடு சரியானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனிடையே இந்த விவகாரத்தில் மாநில பாஜக அரசு எடுத்துள்ள நடவடிக்கை ஒன்று அங்குள்ள பிராமணர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைப் பெருத்தவரை அங்கு இரண்டு வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத் சாதிகளைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம். இந்த 10% பொருளாதார இட ஒதுக்கீட்டில் 6 சதவீதத்தை வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத் சாதிகளுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பாகக் கர்நாடக பாஜக அரசு முன்மொழிவை முன்வைத்தது.

6% ஒதுக்கீடு
இந்த முன்மொழிவு அங்குள்ள பிராமணர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அகில கர்நாடக பிராமண மகாசபாவின் தலைவரும் முன்னாள் மாநில அட்வகேட் ஜெனரலுமான அசோக் ஹரனஹள்ளி, அரசின் நடவடிக்கையைப் பிராமணர்களுக்கு எதிரானது என்று விமர்சித்துள்ளார். கடந்த டிசம்பர் 29ஆம் தேதி வொக்கலிகர்கள் மற்றும் லிங்காயத்துகளை moderately backward என்று பிரிவுக்கு மாற்றினர்.. அங்கு இப்போது வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத் சாதிகளுக்கு முறையே நான்கு மற்றும் 5 சதவிகித இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் நிலையில், 10% இட ஒதுக்கீட்டிலும் அவர்களுக்கு 6% இட ஒதுக்கீட்டை வழங்கும் திட்டத்தைக் கர்நாடக அரசு முன்மொழிந்துள்ளது.

என்ன காரணம்
அதாவது 10% இட ஒதுக்கீட்டில் 6% இந்த இரு சமூகத்தினருக்கும் ஒதுக்கக் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. லிக்காயத்துகள் தங்களுக்கு 15% இடஒதுக்கீடு தேவை என்று கூறி சமீபத்தில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. அதன் பின்னரே கர்நாடக அரசு இந்த முன்மொழிவைச் செய்துள்ளது. கர்நாடகாவின் மக்கள்தொகையில் முறையே 17 மற்றும் 15 சதவீதமாக இருக்கும் லிங்காயத் மற்றும் வொக்கலிகா சமூகத்தினரைத் தேர்தலுக்கு முன்பு கவரும் நடவடிக்கையாகவே இதைப் பல வல்லுநர்களும் பார்த்தனர்.

ஏன் இந்த முடிவு
அதாவது இந்த 10% பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது மாநிலத்தில் உள்ள உயர் சாதி சமூகங்களின் மக்கள்தொகையின் சதவீதத்தை விட அதிகமாக உள்ளதாகக் கர்நாடக பாஜக அரசு முடிவு செய்தது. அங்கு உயர் சாதியினரின் மக்கள் தொகை 4% இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த முடிவை லிங்காயத்துகள் நிராகரித்துள்ளனர். மேலும், தங்கல் கோரிக்கையைக் கேட்கவில்லை என்றால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். அதேநேரம் அரசின் இந்த முடிவு மாநிலத்தில் சுமார் இரண்டு சதவீதம் இருக்கும் கொண்ட பிராமண சமூகத்தையும் கோபமடைய வைத்துள்ளது..

அகில கர்நாடக பிராமண மகாசபா அதிருப்தி
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பிற சமூகங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் அரசின் முடிவு பிராமண சமூகத்திற்கு எதிரானது என்றும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அகில கர்நாடக பிராமண மகாசபா அறிவித்துள்ளது. மேலும் கூறுகையில், "நாங்கள் இட ஒதுக்கீடு கேட்டுப் பல ஆண்டுகளாகப் போராடியது இங்குள்ளவர்களுக்குக் கேட்கவில்லை. ஆனால், மத்திய அரசு இப்போது கொண்டு வந்த 10% இட ஒதுக்கீட்டிலும் இரு குறிப்பிட்ட சாதிகளுக்குக் கொடுத்துவிட்டு.. பிராமணர்களுக்குக் கிடைக்கும் இட ஒதுக்கீட்டை 2-3%ஆகக் குறைக்கிறார்கள்" என்றார்.

பிராமணர்களுக்கு எதிரானது
2019அரசியலமைப்புத் திருத்தத்தின்படி சமூகத்தில் பின்தங்கிய பிரிவுகளின் கீழ் ஒதுக்கீட்டை அனுபவிக்கும் சமூகங்களுக்குப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்றும் இச்சங்கத்தின் தலைவர் அசோக் ஹரனஹள்ளி தெரிவித்தார். மேலும், அரசின் பிராமணர்களுக்கு எதிரான போக்கைக் கண்டிப்பதாகவும் அவர் சாடினார். இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக டிச.29ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அம்மாநில சட்ட அமைச்சர் ஜே சி மதுசாமி இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

விளக்கம்
அதாவது கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மாநில சாதிவாரியான மக்கள் தொகையை மதிப்பிடும் பணிகளில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த பணிகள் 3 மாதங்களில் நிறைவடையும் என்றும் அதன் அடிப்படையிலேயே லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகாக்களுக்கு 6 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் இறுதி முடிவு இருக்கும் என்றும் தெரிவித்தார். கர்நாடக சட்டசபைத் தேர்தல் வரையிலும் கூட இந்த குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படாது என்றே கூறப்படுகிறது. முன்னேறிய சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு அவர்கள் அதிகம் வாழும் பகுதியில் சற்று தாக்கத்தை ஏற்படுத்தும்

பசவராஜ் பொம்மை
இருப்பினும், மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 90 சதவிகிதம் பின்தங்கிய சமூகங்கள் என்பதால், இந்தப் பகுதிகளில் அதுவே அரசுக்கு எதிராக அமையலாம். கர்நாடகாவில், சமூகத்தில் பின்தங்கிய பிரிவுகளின் கீழ் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 10% இட ஒதுக்கீட்டை வொக்கலிகர்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு வழங்க அகில கர்நாடக பிராமண மகாசபா எழுப்பிய ஆட்சேபனை தெரிவித்த நிலையில், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதற்கு முன், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிப்பதாக முதல்வர் பொம்மை உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications