Thug life: மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ? ஏன் சுற்றி வளைக்கிறீர்கள்? நீதிபதி கேள்வி
பெங்களூர்: தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என கூறியதற்கு மன்னிப்பு கேட்பதில் கமல்ஹாசனுக்கு என்ன ஈகோ இருக்கிறது. மன்னிப்பு கேட்கச் சொன்னால் ஏன் சுற்றி வளைக்கிறார் என கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் எனும் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் 38 ஆண்டுகள் கழித்து இயக்குநர் மணிரத்னம்-கமல் இணைந்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த வாரம் சனிக்கிழமை நடந்தது. அதில் பேசிய கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னடம் என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கண்டனம்
இதற்கு கர்நாடக அரசியல்வாதிகள், கன்னட அமைப்புகள், கன்னட திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினர் தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கும் வரை தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்கிறார்கள். மீறி வெளியானால் தியேட்டர்களை தீயிட்டு கொளுத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
ராஜேந்திர பாபு
இந்த விவகாரம் குறித்து பிரபல கன்னட திரைப்பட இயக்குநர் ராஜேந்திர பாபு கூறுகையில், கமல்ஹாசன் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இதுகுறித்து இயக்குநர் மணிரத்னத்திடம் நான் பேசினேன். கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்டால் உயர்ந்த நிலைக்குத்தான் செல்வார். அவர் மரியாதை குறைந்துவிடாது. கன்னடத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் கர்நாடகத்தில் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும். கமல்ஹாசனின் கருத்தை நடிகர் சிவராஜ்குமார் வன்மையாக கண்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மறுத்த கமல்
கமலின் திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என கர்நாடகா சினிமா வர்த்தக சபையும் தெரிவித்துள்ளது. எனினும் நான் எந்த தவறையும் செய்யவில்லை என்பதால் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
கமல் மனு
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வரும் 5ஆம் தேதி வெளியாகும் தக் லைஃப் படத்தை தடுக்கக் கூடாது என கர்நாடகா அரசு, போலீஸ் துறை மற்றும் கன்னட சினிமா வர்த்தக சபைக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது. மேலும் இந்த சினிமா வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று விசாரணை
இந்த நிலையில் இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நீதிபதி நாக பிரசன்னா, தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என எதன் அடிப்படையில் பேசினீர்கள். அதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா? நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா இல்லை மொழியியல் வல்லுநரா?
சமூக நல்லிணக்கம் பாதிப்பு
உங்கள் (கமல்) பேச்சால் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் கர்நாடகாவில் அமைதியின்மையும் உள்ளது. கமலாக இருந்தாலும், யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கமல்ஹாசனின் பேச்சை நீதிபதி லேப்டாப்பில் பார்த்தார். ரூ 300 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்துள்ள நீங்கள், அந்த படம் கர்நாடகாவில் ஓட வேண்டும் என்றால் மன்னிப்பு கேட்கலாமே என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கு பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மன்னிப்பு எங்கே?
அப்போது கர்நாடகா பிலிம் சேம்பர்ஸுக்கு கமல்ஹாசன் எழுதிய கடிதம், நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, இந்த கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே. இதில் விளக்கக் கடிதம்தான் இருக்கிறது. மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ இருக்கிறது? மன்னிப்பு கேட்காமல் ஏன் சுற்றி வளைக்கிறார் என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications