தொழிலதிபரா இருந்தாலும்.. இப்படி சொல்கிறாரே விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி.. நிஜமாவே பெரிய மனசுதான்
பெங்களூர்: பொருளாதாரத்தை முன்னேற்றுகிறேன் என்று கூறி, தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை நீக்குவது சரியான நடைமுறை கிடையாது என்று விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அசிம் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
தி எகனாமிக் டைம்ஸ் என்ற பத்திரிகைக்கு அளித்துள்ள, பேட்டியில் இந்த தகவலை அசிம் பிரேம்ஜி தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறியதை பாருங்கள்.
புலம்பெயர் தொழிலாளர்கள் வாகன விபத்துகளில் பலியாகக் கூடிய செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற ஒரு சூழலில் பல்வேறு மாநில அரசுகளும், தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்க கூடிய சட்டங்களை நீக்குவது மற்றும் திருத்தம் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளனர்.
பஸ்களில் என்ன பாதுகாப்பு நெறிமுறை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.. தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி
முக்கிய சட்டங்கள்
தொழில் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்தல், பணி பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல் ஆகியவற்றை உறுதி செய்வது, குறைந்தபட்ச ஊதியம், தொழிற்சங்கங்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகியோருடனான தொடர்புள்ள சட்டங்களும் நீக்கப்படுவது சரியான நடைமுறை கிடையாது.
தடையாக இல்லை
தொழில் முதலீட்டாளர்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கு இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தரப்பு கூறுகிறது. ஆனால், தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்கள் என்பது கடந்த பல ஆண்டுகளாக போராடி பெறப்பட்டது. தொழிலாளர் நலன் சார்ந்த நடவடிக்கைகள் என்றுமே, தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருப்பதே கிடையாது. அப்படி இருக்கும்போது இந்த சட்டங்களை நீக்குவது அவசியம் அற்றது.
சிக்கல் இல்லை
நான் எனது தொழில் சார்ந்த வாழ்க்கையின்போது, பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் சட்டங்களுடன்தான் புழங்கியுள்ளேன். ஒரு தொழில் நிறுவனத்தை நடத்துபவர் என்ற முறையில், எனக்கு அவை பெரிய சிக்கல்களை ஏற்படுத்தியது கிடையாது. தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு நிலை என்பது இன்னமும் கூட உயர்த்தப்பட வேண்டிய தேவை உள்ளது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தொழிலாளர் சட்டங்களை முடக்குவது என்பது உற்பத்தியை மேலும் பாதிக்கத்தான் செய்யும்.
தொழிலாளர்கள் vs முதலாளிகள் நிலை வரும்
அரசின் இது போன்ற நடவடிக்கைகள், தொழிலாளர் மற்றும் முதலாளிகள் என்ற இரு வர்க்க பேதத்தை ஏற்படுத்தி ஒருவருக்கு எதிராக மற்றொரு தரப்பை நிற்க செய்து விடும். எனவேதான், இது ஒரு மோசமான நடவடிக்கை என்று நான் கூறுகிறேன். புலம்பெயர் தொழிலாளர்கள் வேதனைகள் இதற்கு ஒரு உதாரணம்.
நேரடி பணம்
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்கள் இல்லாதபட்சத்தில், இதுபோன்ற பாதிப்புகளைதான் அனைத்து தொழிலாளர்களும் சந்திக்க வேண்டி வரும். ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளர் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு மாதம் தலா 7,000 ரூபாயாவது அவசரகால நிதி உதவியாக வழங்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஒரு நிறுவனத்தின் தலைவராக இருந்த போதிலும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அஜிம் பிரேம்ஜி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.