ஆளுநரை சந்தித்து இன்றே பதவி பிரமாணம் செய்து வைக்க வலியுறுத்துவேன்: எடியூரப்பா
பெங்களூர்: கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து இன்றே தமக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க வலியுறுத்துவேன் என கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக 15 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து அரசை கவிழ்த்தது பாஜக. இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 3 பேரை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்துள்ளார்.
மேலும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது அடுத்தடுத்து தகுதி நீக்க நடவடிக்கை பாயும் என தெரிகிறது. இதனிடையே 105 எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜக புதிய அரசு அமைக்க முயற்சிக்கிறது.
ஆனால் எடியூரப்பாவை முதல்வராக்க பாஜக மேலிடம் தயங்குவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லியில் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான குழு பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, ஆளுநர் வஜூபாய் வாலாவை இன்று சந்திக்க உள்ளேன். இன்றே தமக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க வலியுறுத்துவேன் என கூறியுள்ளார். இதனால் கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.