இன்னும் ஆட்சி பொறுப்பேற்கவேயில்லை.. அதற்குள் இவ்வளவு அலப்பறையா? சர்ச்சையில் எடியூரப்பா!
கர்நாடக முதல்வராக பொறுப்பேற்கும் முன்பே பாஜக மாநில தலைவர் எடியூரப்பா புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
பெங்களூர்: கர்நாடக முதல்வராக பொறுப்பேற்கும் முன்பே பாஜக மாநில தலைவர் எடியூரப்பா புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
கடந்த செவ்வாய் கிழமை கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி சார்பாக குமாரசாமி நடத்தி வந்த ஆட்சி கலைந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் போதிய பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி கலைந்தது. 13 காங்கிரஸ் மற்றும் 3 மஜத எம்எல்ஏக்கள் உட்பட 16 கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி கலைந்தது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைய உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பாஜக சார்பாக எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இன்று மதியம் அவர் ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதனால் கர்நாடக அரசியலில் நிறைய அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக தற்போது கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கர்நாடகாவில் குமாரசாமி பிறப்பித்த உத்தரவுகளை எல்லாம் ரத்து செய்யும்படி எடியூரப்பா கூறியுள்ளார்.
அனைத்து துறைகளிலும் குமாரசாமி பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் மொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என்று எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் இன்று இரவே தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆகியோருடன் முக்கிய சந்திப்பிற்கும் அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் முக்கிய அதிகாரிகளை அவர் இடமாற்றம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதெல்லாம் போக எடியூரப்பாவின் விக்கிபீடியா பக்கத்தில் இப்போதே முன்னாள் முதல்வர் என்பது திருத்தப்பட்டு முதல்வர் என்று மாற்றப்பட்டுள்ளது. அவர் முதல்வராக பதவி ஏற்கும் முன்பே தற்காலிக முதல்வர் என்று அதில் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல் குமாரசாமி தற்போது காபந்து முதல்வராக இருந்தும் கூட, அவருக்கு ''முன்னாள் முதல்வர்'' என்று விவரம் மாற்றப்பட்டு இருக்கிறது. இப்படி ஆட்சி பொறுப்பேற்கும் முன்பே பாஜகவினரும் எடியூரப்பாவும் அடுத்தடுத்து அதிரடியாக செயல்பட்டு வருவது எதிர்கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.