பாஜக மேலிடத்தை மிரட்டிய எடியூரப்பா? மகனுக்கு மாநில தலைவர் பதவி கிடைத்தது எப்படி? பசனகவுடா புதுகுண்டு
பெங்களூர்: எடியூரப்பா பாஜக மேலிட தலைவர்களை மிரட்டி தனது மகன் விஜயேந்திராவுக்கு மாநில தலைவர் பதவியை பெற்று கொடுத்துள்ளதாக அந்த கட்சியை சேர்ந்த மூத்த எம்எல்ஏ பசனகவுடா பட்டீல் பரபரப்பாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. இந்த தேர்தல் தோல்விக்கு பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவை ஓரம்கட்டியதே முக்கிய காரணமாக கூறப்பட்டது.

இதையடுத்து பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து எம்பி நளின் குமார் பட்டீல் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் எடியூரப்பாவின் 2வது மகனும் எம்எல்ஏவுமான விஜயேந்திரா அந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார். இதன்மூலம் எடியூரப்பாவை பாஜக மேலிடம் சமாதானம் செய்துள்ளது. அதோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி எடியூரப்பாவுக்கு மேலிடம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது சில மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கர்நாடகா பாஜகவில் உள்கட்சி பூசல் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது அது உறுதியாகி உள்ளது. அதாவது வெளிப்படையாக பாஜகவின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான பசனகவுடா பட்டீல் எத்னால், எடியூரப்பாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி பசனகவுடா பட்டீல் எத்னால் கூறியதாவது:
எடியூரப்பாவின் மகனுக்கு பாஜக மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் எடியூரப்பா பாஜக மேலிட தலைவர்களை மிரட்டியுள்ளார். அவருக்கு மேலிட தலைவர்கள் பயப்படுகின்றனர். ஒழுக்கம் பற்றி அவர்கள் பேசுகின்றனர். நாங்கள் என்ன அடிமைகளா?. அதோடு எங்களுக்கு பலம் இல்லையா? எங்களுக்கும் மக்கள் ஆதரவு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிரசாரம் செய்ய மாட்டேன். பிரசாரம் செய்யாமல் சிவமொக்காவிலேயே (எடியூரப்பாவின் சொந்த ஊர்)இருந்து விடுவேன் என எடியூரப்பா கூறியுள்ளார்.
மேலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வி சோமண்ணா (பாஜக மூத்த தலைவரும் அமைச்சரான இவர் 2 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்) பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையை தோற்கடிக்க விஜயேந்திரா பணம் அனுப்பினார். இதுபற்றி பசவராஜ் பொம்மையே பேசியுள்ளார். ஆனாலும் ஆச்சரியம் என்னவென்றால் அவர் தற்போது பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவில் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா செய்த சதிகள் தொடர்பான உண்மை வெளிவர வேண்டும்.
மேலும் ஷிகாரிபுராவில் போட்டியிட்ட விஜயேந்திராவுக்கு எதிராக காங்கிரஸ் பலவீனமான வேட்பாளரை நிறுத்தியது. இதற்கு கைமாறாக எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவை ஆதரித்து அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சோமண்ணாவுக்கு எதிராக செயல்பட்டனர். மேலும் டிகே சிவக்குமார் போட்டியிட்ட கனகபுராவிலும் காங்கிரஸ் எடியூரப்பா இடையே மறைமுக ஒப்பந்தம் இருந்தது'' என பரபரப்பாக பேசியுள்ளார்.
பசனகவுடா பட்டீல் எத்னாலின் இந்த பேச்சு என்பது கர்நாடகா பாஜக நிர்வாகிகள் இடையே பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பாஜக மேலிடம் மற்றும் கர்நாடகா பாஜக தலைமை சார்பில் இந்த விவகாரம் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பசனகவுடா பட்டீல் எத்னாலின் இந்த பேச்சு என்பது கர்நாடகா பாஜகவில் உள்கட்சி பூசல் இருப்பதை உறுதியாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications