வேலை தேடிய இளைஞர் கடத்தல்.. பிச்சை எடுத்த கொடூரம்.. ரசாயன ஊசி போட்டு பார்வையை பறித்த டெல்லி மாபியா!
கான்பூர்: வேலை தேடி பீகாரிலிருந்து டெல்லி சென்ற இளைஞரை போதை ஊசி போட்டு பிச்சை எடுக்க வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அளவுக்கு அதிகமான ஊசியால் பார்வையை இழந்துள்ளார் அந்த இளைஞர்.
பீகாரை சேர்ந்தவர் 26 வயதான சுரேஷ் மஞ்சி. இவர் தினசரி கூலித் தொழிலாளி. இவர் கான்பூரில் தனது மூத்த சகோதரருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி டெல்லிக்கு சென்றார்.
அங்கு அவர் காணாமல் போனார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை உடல் முழுவதும் காயங்களுடன் சுரேஷ் வீடு திரும்பினார். அப்போது அவர் குடும்ப உறுப்பினர்களிடம் கூறுகையில் தன்னை ஒரு கும்பல் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளியதாக கூறினார்.

கண்களில் ரசாயன ஊசி
இதற்காக அவரது கண்களில் சில ரசாயன ஊசிகளை அந்த கும்பல் செலுத்தியதால் அவருக்கு பார்வை இழப்பும் ஏற்பட்டது. இந்த தகவலால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கோபமடைந்ததால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கான்பூர்
குற்றம்சாட்டப்பட்டவர்களில் இருவர் கான்பூரை சேர்ந்தவர். போலீஸார் பெண் ஒருவருடன் சேர்த்து 3 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து சுரேஷ் கூறுகையில், டெல்லியில் உ ள்ள குலாபி குடியிருப்பு பகுதியில் விஜய் என்பவர் எனக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்தார். அவர் ஒரு பெண்ணின் வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார்.

பார்வை பறிப்பு
அங்கு என்னை துன்புறுத்திய அவர்கள், என் பார்வையை இழக்க செய்தனர். இதையடுத்து விஜய், ராஜ் எனும் டெல்லி மாபியா கும்பலிடம் என்னை ஹரியானாவுக்கு அனுப்புமாறு தெரிவித்தார். இதனால் நான் ஹரியானாவுக்கு அனுப்பப்பட்டு அங்கு பிச்சை எடுக்க வைக்க கட்டாயப்படுத்தப்பட்டேன்.

இரும்பு கம்பிகளால் தாக்குதல்
என்னை இரும்பு கம்பிகளால் அடித்தனர். விஷ ஊசிகளை உடம்பில் ஏற்றினர். நான் பிச்சை எடுக்காவிட்டால் எனக்கு சாப்பாடு போட மாட்டேன் என தெரிவித்தனர். விஷ ஊசிகளை எனக்கு போட்டதால் எனது உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டது. இதனால் ராஜ் என்னை விஜய்யுடன் கான்பூருக்கு அனுப்பிவிட்டான். அங்கும் என்னை விஜய் பிச்சை எடுக்க வைத்தார்.

உள்ளூர் மக்கள்
கடந்த வியாழக்கிழமை நான் உள்ளூர் மக்களின் உதவியுடன் எப்படியோ எனது சகோதரனின் வீட்டுக்கு வந்தடைந்தேன். நகரின் முக்கிய பகுதிகளில் என்னை காலை முதல் இரவு வரை ஓய்வின்றி பிச்சை எடுக்க வைத்தனர். தினமும் இரவு நேரத்தில் நான் பிச்சை எடுத்த காசுகளை கொண்டு சென்றுவிடுவார்கள் என்றார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோல் வேறு யாரெல்லாம் சிக்கியுள்ளார்கள் என்பதையும் விசாரித்து வருகிறார்கள்.

மாபியாக்கள் துன்புறுத்தல்
கடத்தல் மாபியாக்கள் செய்த துன்புறுத்தலால் சுரேஷின் முகமெல்லாம் வீங்கி உடல் எல்லாம் காயமாகியுள்ளது. பார்வை இல்லாததால் சுரேஷால் தான் எங்கு அடைத்து வைக்கப்பட்டு பிச்சை எடுக்க வைக்கப்பட்டேன் என்பது குறித்து சொல்ல இயலவில்லை. முகத்தில் அடித்ததால் அவரது வாய் வீங்கியுள்ளது. அவருக்கு மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு பார்வை கிடைப்பது குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications