"நாங்கள் இந்துக்கள்.. எனவே அப்பாவிகள்.!" சொல்வது பில்கிஸ் பானு பலாத்கார குற்றவாளி! ஷாக் தகவல்
காந்திநகர்: குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகள் மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
கடந்த 2002இல் குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் கலவரம் ஏற்பட்டது. நாட்டில் ஏற்பட்ட பெரிய கலவரங்களில் ஒன்றான இதில் பல நூறு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரத்தில் பல மோசமான சம்பவங்கள் அரங்கேறின. பலர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.. பெண்கள் பலரும் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

பில்கிஸ் பானு
அப்படி அரங்கேறிய கொடூரமான சம்பவம் தான் பில்கிஸ் பானு கொடூர பலாத்காரம். அகமதாபாத் ரன்திக்பூர் பகுதியில் பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை ஒரு கும்பல் அடித்தே கொன்றது. அப்போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கொடூரமாகக் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி பில்கிஸ் பானுவின் சிறு குழந்தையைப் பாறையில் மோதி மிகக் கொடூரமாக அடித்தே கொன்றன.

விடுதலை
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதை விசாரித்த சிபிஐ, 2004இல் குற்றவாளிகளைக் கைது செய்தது. இதில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது மும்பை செசன்ஸ் நீதிமன்றம். அதன் பின்னர் சிறையில் இருந்த அவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிக்கை விடுத்தனர். அதன்படி அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் செய்யப்பட்டனர்.

தீபாவளி விற்பனை
இந்தச் சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பில்கிஸ் பானுவின் வீட்டிற்கு நேர் எதிராக உள்ள பட்டாசு கடையில் தீபாவளி சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அந்தக் கடை ராதேஷ்யாம் ஷாவுக்கு சொந்தமானது.. ராதேஷ்யாம் ஷா இப்போது அங்கே வசிக்கவில்லை என்றாலும் கூட அவரது சகோதரர் தான் அந்த கடையைப் பார்த்து வருகிறார். பில்கிஸ் பானுவை கொடூரமாக பாலத்காரம் செய்து அவரது குடும்பத்தினரைக் கொன்ற குற்றவாளிகளில் இவரும் ஒருவர்.

குற்றவாளிகள்
பில்கிஸ் பானு இப்போது அந்த வீட்டை காலி செய்துவிட்டார். குற்றவாளிகள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவின் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. குற்றவாளிகள் அனைவருமே அந்த கிராமத்தில் தான் இருக்கின்றனர். இதனால் வேறு வழியின்றி கிராமத்தை விட்டு வெளியேறி உள்ளார். இதனிடையே குற்றவாளிகளில் ஒருவரான கோவிந்த் நை என்பவர் தாங்கள் அப்பாவி என்று தெரிவித்து உள்ளார்.

அப்பாவிகள்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நாங்கள் அப்பாவிகள். மாமாவும் மருமகனும் கிராமத்தில் இருப்பவர்களைப் பலாத்காரம் செய்வதைப் பார்த்து உள்ளீர்களா? இந்து சமூகத்தில் நடக்குமா? இல்லை, இந்துக்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். எனவே தான் சொல்கிறேன்.. நாங்கள் இந்துக்கள்.. அதனால் அப்பாவிகள்" என்று அவர் தெரிவித்தார். இதே கோவிந்த் நை தான் கடந்த 2017ஆம் ஆண்டு தனக்கு எதிராகச் சாட்சியம் சொன்னவர்களை மிரட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உற்சாக வரவேற்பு
அதேபோல மற்றொரு குற்றவாளியான ராதேஷ்யாம் ஷா, அவரது சகோதரர் பரோலில் வெளியே வந்த சமயத்தில் பெண்ணிடம் அத்துமீறி உள்ளனர். இப்படி பரோலில் வெளிவந்த சமயத்திலேயே இவர்கள் மீது புகார்கள் உள்ளன. இருந்த போதிலும், அவர்கள் நன்னடத்தை காரணமாக ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளன. இவர்கள் விடுதலையாகும் போது பல்வேறு இந்து அமைப்புகள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இயல்பு நிலை இல்லை
குற்றவாளிகள் அனைவரும் இப்போது மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வருகின்றனர். ஆனால் பில்கிஸ் பானு வாழ்க்கை மார்ச் 3, 2002க்கு பின் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. அன்று கிராமத்தில் இருந்து வெளியேறிய அவர் இன்னும் திரும்பவில்லை. தான் இப்போது உணர்ச்சியற்றவராக இருபதாகவும் கடந்த 20 ஆண்டுகளில் தனது பாதுகாப்பு குறித்து யாரும் சிந்திக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications