3 மாதமாக காரணமின்றி விடுப்பு... 20 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப ஏர் இந்தியா முடிவு
டெல்லி: உரிய விளக்கங்கள் ஏதும் தரப்படாமல் கடந்த மூன்று மாதங்களாக விடுப்பில் உள்ள 20 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஏர் இந்தியா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சுமார் 3500 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் சராசரியாக 200 ஊழியர்கள் மாதந்தோறும் வேலை ஏதும் செய்யாமல் ஊதியம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

எனவே, கடந்த மூன்று மாத காலமாக தகுந்த அறிவிப்பின்றி விடுப்பில் உள்ள இருபது ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வதற்கான உத்தரவை ஏர் இந்தியா பிறப்பித்துள்ளதாம். இந்த இருபது ஊழியர்களில் 17 பேர் மும்பையையும், 3 பேர் டெல்லியையும் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, கடந்த ஆறு மாதங்களில் ஒழுங்கு நடவடிக்கையாக சுமார் 47 மும்பை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது ஏர் இந்தியா. இந்நிலையில் தற்போது மேலும் 20 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஏர் இந்தியா முடிவெடித்துள்ளது.
அதேபோல், இனி வரும் காலங்களில் தகுந்த காரணங்கள் இன்றி விடுப்பு எடுப்பவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப் படுவார்கள் என்ற அதிரடி உத்தரவையும் ஊழியர்களுக்கு பிறப்பித்துள்ளது.
பெரும்பாலும் இந்த பிரச்சினையில் மும்பை ஊழியர்களே சிக்குவதற்கு காரணம் அவர்கள் முன்பு கையெழுத்திட்டுக் கொடுத்த அக்ரிமெண்ட் தானாம். அதன்படி, வாரம் 80 மணி நேரம் மட்டுமே ஊழியர்கள் வேலை செய்தால் போதுமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அந்த அக்ரிமெண்ட் வாரத்திற்கு நூறு மணி நேரம் என மாற்றியமைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாத ஊழியர்கள் பணி புரிய வர மறுக்கின்றனராம். ஆனால், இது தவிர பல மறைமுகக் காரணங்களும் ஏர் இந்தியாவில் உள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்தில் வெளியான தகவலின் படி ஏர் இந்தியாவில் பணி புரியும் 600 விமான பணிப்பெண்கள் அதிக உடல் எடையால் அவதிக்குள்ளாகி இருக்கிறார்களாம். அடுத்த 18 மாதத்திற்குள் அவர்கள் தங்கள் எடையை குறைக்கவில்லையெனில், அவர்கள் பணியிழக்கும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் அதிக உடல் எடையைக் கொண்டிருப்பதாகக் காரணம் காட்டி மூன்று விமானப் பணிப் பெண்கள் பணி நீக்கம் செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications