"இந்த" தங்கத்தை உடனே வித்துட்டு ஓடிடுங்க.. அட்சய திருதியை நாளில் ஆனந்த் சீனிவாசன் தந்த எச்சரிக்கை!
சென்னை: "தங்கம் எப்போது ஏறும்... எப்போது இறங்கும்?" என்பது தான் கடந்த சில ஆண்டுகளாகவே டிரெண்டிங் கேள்வியாக இருக்கிறது.. அக்ஷய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில், மக்கள் அனைவருமே ஆர்வமாகத் தங்கம் வாங்குவார்கள். ஆனால், ஒரு வகை தங்கத்தை மட்டும் வாங்க வேண்டாம் என எச்சரிக்கிறார் ஆனந்த் சீனிவாசன். அது கையில் இருந்தாலும் விற்றுவிட்டு ஓடுவதே பெஸ்ட் என்றும் சொல்கிறார்.
கடந்த சில காலமாகவே தங்கம் விலை உச்சத்திற்குப் போய்விட்ட நிலையில், மக்கள் தங்கம் வாங்குவதில் சிரமம் இருந்தது. இதனால் நமது நாட்டில் தங்கத்தை சிறுக சிறுக வாங்க பல்வேறு வழிகள் வந்தது. அதில் ஒன்று தான் 'கோல்ட் பீஸ்' அல்லது 'கோல்ட் இடிஎஃப்'.. இதில் நாம் பங்குச்சந்தையில் டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்வோம்.

கோல்ட் பீஸ்
இதுநாள் வரை இந்த கோல்ட் பீஸில் ஒரு விதிமுறை இருந்தது. அதாவது, நீங்கள் 100 ரூபாய்க்கு கோல்ட் பீஸ் வாங்கினால், அந்த நிறுவனம் 100 ரூபாய்க்கு ஈடாக நிச்சயம் தங்கத்தை வாங்கி லாக்கரில் வைத்திருக்க வேண்டும். ஆனால், வரும் ஏப்ரல் 1ம் தேதி இந்த விதியில் ஒரு பெரிய மாற்றம் வந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் குறிப்பிடுகிறார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது வீடியோவில், "தற்போது தங்கம் விலை விண்ணைத் தொட்டுவிட்டது. இறக்குமதி செய்ய இந்தியாவிடம் டாலர் தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால் 50% மட்டும் தங்கமாக வைத்திருந்தால் போதும், மீதி 50 சதவீதத்தை 'ஃபியூச்சர்ஸ் மார்க்கெட்டில்' (Futures Market) வைத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இது ஒரு ஆபத்தான போக்கு. தங்கம் இல்லாமல் தங்கம் இருப்பதாகக் கணக்குக் காட்டும் இந்த முறை ஒருவகையில் மங்காத்தா சீட்டு ஆட்டம் போன்றது" என அவர் எச்சரிக்கிறார்.
விற்றுவிடுங்கள்
சரி நிலைமை இப்படிப் போய்விட்டது என விற்றால் லாபத்தில் வரி (Capital Gains Tax) கட்ட வேண்டுமே என்ற கேள்வி பலருக்கும் வரும். இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன், "வரி என்பது நீங்கள் ஈட்டிய லாபத்தில் ஒரு பகுதி தான். ஆனால், ஒரு நிறுவனம் உங்கள் பணத்தை வைத்துச் சரியாக 'ஹெட்ஜ்' செய்யாமல் நஷ்டமடைந்தால், உங்கள் முதலீடே காலியாகிவிடும். வரி கட்ட வேண்டி இருந்தாலும் பரவாயில்லை, கோல்ட் பீஸை விற்றுவிட்டு அந்தப் பணத்தில் நேரடித் தங்கமாக வாங்கி லாக்கரில் வைப்பதே புத்திசாலித்தனம்" என்கிறார்.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதும் திறப்பதுமாக இருப்பதால், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும். இதனால் தங்கத்தின் விலையிலும் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவும். இதன் காரணமாகவே ஒரு நாள் 100 ரூபாய் ஏறும், அடுத்த நாள் 100 ரூபாய் விழும் என மாறி மாறி நடக்கிறது" என்றார்.
ஆபத்து
டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த காலத்தில் இத்தனை காலம் பாதுகாப்பானது என இருந்த கோல்ட் பீஸில் உள்ள ஆபத்தை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் பணத்தை ரிஸ்க்கான ஃபியூச்சர்ஸ் மார்க்கெட்டில் போடுவது எந்தவொரு விதத்திலும் பாதுகாப்பானதாக இருக்காது என்பதே அவரது கருத்து. "கண்ணால் பார்க்கும் தங்கம் மட்டுமே உங்கள் சொத்து" என்பது பழைய ஸ்டைல் போலத் தெரிந்தாலும், இப்போதைய சூழலில் அதுவே சிறந்தது என்பது அவரது வாதம்.
வரி விளக்கம்
புதிய வரி முறையின் தங்கத்தை விற்கும் போது கேபிட்டல் கெயின் வரி கட்ட வேண்டும். இருப்பினும், அது நமது வரி வரம்பிலேயே வரும். உங்கள் மொத்த ஆண்டு வருமானம் ₹12 லட்சம் வரம்பிற்குள் இருந்தால், நீங்கள் கோல்ட் பீஸ் விற்ற லாபத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை. அதாவது ஏப்ரல் 1, 2023-க்குப் பிறகு வாங்கப்பட்ட கோல்ட் பீஸ் லாபமானது, உங்கள் சம்பளம் அல்லது வணிக வருமானம் போலவே உங்கள் 'மொத்த வருமானத்துடன்' சேர்க்கப்படும். இதற்குத் தனியாக 10% அல்லது 20% என்று வரி கிடையாது. எனவே, இதைச் சேர்த்த பிறகு உங்கள் வருமானம் ரூ.12 லட்சத்திற்குக் கீழ் இருந்தால் வரி பூஜ்ஜியமாகிவிடும்.
இது சாதாரண செய்தி மட்டுமே..! இதை நிச்சயம் பொருளாதார ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் முதலீட்டு ஆலோசகரிடம் உரிய ஆலோசனைகளைப் பெற வேண்டும்!












Click it and Unblock the Notifications