ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 19ம் நிதியாண்டின் இலக்கை எட்ட நல்ல தொடக்கம் - அறிக்கை
ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியதால் திட்டமிட்டபடி இந்த நிதியாண்டின் இலக்கை எட்ட உதவியாக இருக்கும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
மும்பை: நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியதால் திட்டமிட்டபடி இந்த நிதியாண்டின் இலக்கை எட்ட உதவியாக இருக்கும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
நல்லதொரு தொடக்கம் பாதி வெற்றி அடைந்ததற்கு சமம் என்று சொல்வதுண்டு. கடந்த நிதியாண்டின் ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டாலும், பெரும்பான்மையான பொருட்களுக்கு வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதாக பொதுமக்களும், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரும் அதிருப்தி தெரிவித்தனர்.
வாட் வரி விதிப்பில் வரி இல்லாத பொருட்கள் மற்றும் குறைந்த வரி விகிதங்களாக இருந்த பொருட்களுக்கு எல்லாம் வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலையும் உயரும் என்பதால், ஜிஎஸ்டி வரி விதிப்பிலும் வாட் வரி விதிப்பில் இருந்தது போல், வரி விகிதங்களை குறைக்குமாறு அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் அனைவரி கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு மாதமும் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து பெரும்பாலான பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைத்தும் பூஜ்ஜியம் சதவிகிதமாகவும் மாற்றி உத்தரவிட்டார். இருந்தாலும், ஜிஎஸ்டியில் மாதாந்திர ரிட்டன் தாக்கலில் நிலவிவரும் குழப்பங்களால் வர்த்தகர்களும் தொழில் துறையினரும் ரிட்டன் தாக்கல் செய்வதில் தயக்கம் காட்டினர்.
வாட் வரி விதிப்பில் இருந்தது போல ஒரே ரிட்டனாக இல்லாமல், ஜிஎஸ்டி வரி விதிப்பில் மூன்று விதமான மாதாந்திர ரிட்டன்கள் இருப்பதால் பெரும்பாலான வர்த்தகர்களும் தொழில துறையினரும் ரிட்டன்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் மாதாந்திர ரிட்டன்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
ஜிஎஸ்டியின் ஆரம்ப மாதமான ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 95000 கோடி ரூபாயை தொட்டாலும், பின்னர் வந்த மாதங்களில் ஜஎஸ்டி வரி வருவாய் பெரும் சரிவையே சந்தித்தன. வரி வருவாயில் முக்கிய பங்காற்றும் மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு பரிமாற்றத்திற்கு முறையான வழிமுறைகள் வகுக்கப்படாததும், விற்பனை சரிந்து ஜிஎஸ்டி வரி வசூலும் சரிவை சந்திக்க காரணமாகும்.
ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து சரிவை சந்தித்ததால் ஜிஎஸ்டி கவுன்சிலும், மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு பரிமாற்றத்திற்கு உதவும் ஆவணமான இ-வே பில் என்னும் முறை ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இந்த உற்சாகத்தால் கடந்த மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூல் சற்று அதிகரித்து 89,885 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியது.
ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்தது போலவே ஏப்ரல் 1ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு பரிமாற்றத்திற்கு இ-வே பில் முறையை அமல்படுத்தியது. இதன் மூலம் மாநிலங்களுக்கு இடையில் சரக்கு பரிமாற்றம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. கூடவே விற்பனையும் அதிகரித்ததால் ஜிஎஸ்டி வரி வசூலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு ஜிஎஸ்டி கவுன்சில் எதிர்பார்த்தது. அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்போலவே ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 1,03,458 கோடியாக அதிகரித்தது.
மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்த அறிக்கையின் படி, ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூலில் மத்திய அரசின் வருவாயாக (CGST) 18,652 கோடி ரூபாயும், மாநிலங்களின் (SGST) பங்காக 25,704 கோடி ரூபாயும் ஒருங்கிணைந்த (IGST) வரியாக 50,548 கோடி ரூபாயும் வசூலானது என்று தெரிவித்துள்ளது.
நடப்பு 2018-19ம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரியாக சுமார் 12.9 லட்சம் கோடி ரூபாய் வசூலிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது மாதாந்திர சராசரியாக சுமார் 1.07 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க திட்டமிடப்பட்டது. நிதி அமைச்சகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுபோலவே ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரியானது 1,03,458 கோடி ரூபாய் வசூலாகி சாதனை படைத்துள்ளது.
மத்திய அரசு வரி ஏய்ப்புக்கு எதிராக எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளால், குறிப்பாக வரி பிடித்தம் செய்யும் இடங்கள் (TDS & TCS) உள்ளீட்டு வரிப்பயன்பாடு போன்றவற்றில் நடக்கும் முறைகேடுகளை களையவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவது நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் எதிர்பார்த்த அளவை எளிதில் எட்டும் என்று எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
நடப்பு நிதியாண்டில் மொத்தமுள்ள மாநிலங்களில், கர்நாடகா, ஹரியானா, பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், சட்டீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் சுமார் 14 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்றும், மீதமுள்ள மாநிலங்களில் எதிர்பார்த்த அளவை விட நல்ல முன்னேற்றம் இருக்கும் என்றும் எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
ஆய்வறிக்கையின் படி, 2018-19ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி வசூலில் குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம், பீகார், ஹரியானா ஆகிய மாநிலங்கள் ஜிஎஸ்டி வரி வருவாயையே பெரிதும் நம்பி உள்ளன. அதாவது ஜிஎஸ்டி வரி வருவாயில் சுமார் 38 சதவிகிதம் மேற்குறிப்பிட்ட மாநிலங்களுக்கு சென்றுவிடுகின்றன).
ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் சுமார் 25 சதவிகிதத்திற்கும் குறைவாகவே வசூலாகும். இதனைத் தவிர இதர வருவாய்களின் மூலம் தங்கள் மாநிலங்களின் தேவைகளை பூர்த்திசெய்துகொள்கின்றன என்று ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.