ஆயுத பூஜை தொடங்கி காந்தி ஜெயந்தி வரை 4 நாள் வங்கி விடுமுறை
செப்டம்பர் 29ஆம் தேதி ஆயுதபூஜை தொடங்கி அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி வரை வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை வர உள்ளது.
சென்னை: இம்மாதம் ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்களை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு ஏற்கனவே மாதத்தில் 2வது சனி, 4வது சனி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பண்டிகை தின விடுமுறையும் இணைந்து கொண்டால் வாடிக்கையாளர்களுக்கு சிக்கல்தான்.

இரண்டு நாட்கள் வங்கிகள் விடுமுறை விட்டாலே பெரும்பாலான ஏடிஎம்கள் இயங்காத நிலைதான் தமிழகம் முழுவதும் நீடித்து வருகிறது. மறுபடி திங்கட்கிழமை வங்கிகள் திறந்த பிறகுதான் ஏடிஎம்கள் சரியாகும் நிலை உள்ளது.
வரும் 29 ஆம் தேதி ஆயுத பூஜை, 30 ஆம் தேதி விஜய தசமி, அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி எனத் தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
29ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை வங்கிகள் இயங்காது. எனவே, வாடிக்கையாளர்கள் 28ஆம் தேதிக்கு முன் வங்கி பரிவர்த்தனைகளை முடித்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் வங்கிகளுக்கோ, ஏடிஎம்களுக்கோ சென்று தேவையான அளவுக்கு பணத்தை எடுத்துக்கொள்வது நல்லது என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14ஆம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, 15ஆம் தேதி செவ்வாய்க் கிழமை சுதந்திர தினம் என நான்கு நாட்கள் வங்கிகளுக்கு, தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
அதேபோல், 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி, 26ஆம் தேதி 4வது சனிக்கிழமை, 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிகள் தொடர் விடுமுறையால் ஏடிஎம்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வங்கி நிர்வாகமும் ஏடிஎம்களில் தேவையான அளவுக்கு பணத்தை இருப்பு வைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications