அட்லி, சட்னி பற்றியெல்லாம் சட்டசபையில் பேசுறீங்களே! கிட்னி குறித்து எப்போ பேசுவீங்க? அதிமுக தாக்கு
சென்னை: சட்டசபையில் திமுக அட்லி பற்றி பேசுகிறது, சட்னி குறித்தும் பேசுகிறது, ஆனால் கிட்னி பற்றி மட்டும் பேச மறுக்கிறது என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கூறியிருப்பதாவது: சட்டசபையில் திரைப்பட இயக்குநர் அட்லியைப் பற்றிப் பேசுகிறார்கள்..!
கேள்வி கேட்டால் சட்னியைப் பற்றியும் பேசுவோம் என்கிறது திமுக...! ஆனால் திமுகவைப் பார்த்து குற்றம் சாட்டிய கிட்னியைப் பற்றி மட்டும் பேச மறுக்கிறார்கள்..! என விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் ஆளுநர் உரை நிகழ்ந்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடந்தது. அப்போது திமுக எம்எல்ஏ சிவசங்கர் பேசினார்.
அவர பேசுகையில், முதல்வரை வைத்து படம் எடுத்த அட்லீ, பல படங்களில் இருந்து காட்சிகளை வெட்டி ஒட்டி எடுத்து அதை சுவாரஸ்ய படமாக எடுப்பார். அது போல் திமுகவின் திட்டங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதுதான் ஆளுநர் உரை அமைந்திருக்கிறது.
அதாவது பழைய விஷயங்களை வார்த்தைகளை மாற்றி போட்டு ஆளுநர் உரையை தயாரித்திருக்கிறார்கள். தவெக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இணக்கம் ஏற்பட்டது என்பதையே ஆளுநர் உரை காட்டுகிறது.
எந்த மக்கள் உங்களை (விஜய்யை) தேர்வு செய்தார்கள் என சொன்னீர்களோ அந்த மக்கள்தான் இன்று போராடுகிறார்கள். இவ்வாறு சிவசங்கர் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ராஜ்மோகன், அட்லிக்கும் சட்டசபைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. திரைப்படத் துறையில் இருந்து முதல்வர் மக்கள் பணிக்கு வந்துவிட்டார். வார்த்தை விளையாட்டுகளை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான கருத்துகளை பேசுங்கள்.
முழுநேர அரசியல்வாதி சிவசங்கா் அட்லீ குறித்து பேசுவது ஆச்சாியமாக இருக்கிறது என்றார். அதற்கு சிவசங்கர், அட்லி குறித்தும் பேசுவேன், சட்னி குறித்தும் பேசுவேன் என்றார்.
இந்த நிலையில்தான் அட்லி, சட்னி குறித்து பேசுகிறீர்களே, கிட்னி குறித்தும் பேசுங்களேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் முழுக்க வறுமையில் இருக்கும் பெண்களை குறிவைத்து அவர்களின் கிட்னிகளை விலைக்கு வாங்கி அதை பல கோடிக்கு விற்கும் மோசடி கடந்த ஆட்சியில் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதிலும் குறிப்பாக ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கிட்னிகளை சட்டவிரோதமாக வாங்கிய தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி அப்போதைய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், தனது பிரச்சாரங்களிலும் கிட்னி முறைகேடு குறித்து பேசியிருக்கிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி சிறுநீரக விற்பனை முறைகேடு பிரச்சனையை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை உலகில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications