பீட்ரூட்விலை தொடர்ந்து சரிவு.. மகிழ்ச்சியில் மக்கள்.. கவலையில் விவசாயிகள்
நெல்லை: விலை ஏறி கொண்டே செல்லும் பல்லாரி வெங்காயத்தால் மக்கள் கவலை அடைந்துள்ள நிலையில் தற்போது பீட்ரூட் விலை கிடுகிடுவென சரிந்து வருவதால் மக்கள் குஷியடைந்துள்ளனர். அதேசமயம், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனராம்.
காய்கறி சாகுபடிக்கு பெயர் பெற்ற நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் தக்காளி, பீன்ஸ், அவரை, பீட்ரூட், பல்லாரி, வெங்காயம், பூசணி உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது.
இங்கு பயிராகும் காய்கறிகள் சந்தைகள் மூலம் கேரளா, மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இந்தாண்டு குற்றாலம் சீசன் நன்றாக இருந்தும் போதிய தண்ணீர் வராததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.

விவசாயிகள் கிணறுகளை லட்சகணக்கில் செலவு செய்து தூர்வாறி அதன் மூலம் வந்த தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த முறை இந்த பகுதியில் விவசாயிகள் பல்லாரி பயிரிட்ட போது போதிய விலை கிடைக்காததால் மாற்று பயிராக புடலங்காய், பூசணி, பீட்ரூட் ஆகியவற்றை சாகுபடி செய்தனர். கடந்த சில நாட்களாக பல்லாரி ரூ.55 முதல் ரூ.65 வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில் பல்லாரி விலைக்கு எதிராக பீட்ரூட் விலை தாறுமாறாக இறங்கி வருவதால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர். விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வெறும் ரூ.7ல் கொள்முதல் செய்து விட்டு சந்தையில் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கின்றனர்.
இதனால் கமிஷன் தொழிலாளர் சம்பளம் போக கையில் ஒன்றும் இல்லை என விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர். பல்லாரி விலை உயர்ந்து வரும் நிலையில் பீட்ரூட் விலை குறைந்து கொண்டே போவதால் விவசாயம் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நாங்கள் பீட்ரூட் பயிரிட்டுள்ளோம். தற்போது மொத்த வியாபாரிகள் எங்களிடம் பீட்ரூட்டை ரூ.7க்கு வாங்கி சந்தையில் ரூ.30 வரை விற்கின்றனர். ஆனால் எங்களிடம் ரூ.20க்கு கொள்முதல் செயதால்தான் லாபம் பார்க்கலாம் என்றனர்.












Click it and Unblock the Notifications