விண்னைத் தொட்ட தேங்காய் விலை... வீட்டில் இனி சட்னிக்கு தடா!
கடுமையான வறட்சியின் காரணமாக தேங்காய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இது தேங்காய் சட்னி பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
காலையில் டிபன் சாப்பிடுவதற்கு இட்லியோ அல்லது தோசையோ எதுவானாலும், தொட்டுக்கொள்ள நமக்கு தேங்காய் சட்னி கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டும். இல்லை என்றால் வீட்டை ரணகலம் ஆக்கிவிடுவோம். இனிமேல் அப்படி செய்ய முடியாது. ஏன் என்றால் தேங்காய் விற்கும் விலை அப்படி.
உதய கீதம் படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியில், கவுண்மணி ஒரு தேங்காய் கடைக்கு சென்று தேங்காய் கடைக்கு சென்று இரண்டு ரூபாய் கொடுத்து ஒரு தேங்காய் கேட்பார். அதற்கு அந்த தேங்காய் கடைக்காரர் “என்னப்பா நீ, இத்தனை நாளா ஜெயிலில் இருந்துட்டு வந்தியா என்ன? இப்பெல்லாம் ரெண்டு ரூபாய்க்கு தேங்காய் பத்தைதான் கிடைக்கம் என்று சொல்வார்.
அதுபோலத்தான் தற்போதைய தேங்காய் விலை நிலவரமும் விண்ணை முட்டும் அளவில் இருக்கின்றது. ஏனென்றால், இன்றைய காலை நிலவரப்படி, சின்ன தேங்காய் சிதறு தேங்காய் விலை 20 ரூபாய், நடுத்தர சைஸ் தேங்காய் விலை 25 ரூபாய் மற்றும் பெரிய சைஸ் தேங்காய் விலை 30 ரூபாய் என்று கண்ணை கட்ட வைக்கின்றது.

வறட்சியால் பாதிப்பு
கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால், தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. இந்த வறட்சிக்கு தென்னை மரங்களும் தப்பவில்லை. தென்னை மரத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால், காய்க்கும் பருவத்தில் உள்ள தென்னங்குறுத்துகள் காய்ந்து கருகி வருகின்றன.

தேங்காய் சந்தை
ஈரோடு சென்னிமலை, அவல்பூந்துறை, அறச்சலூர், வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், சென்னிப்பாளி போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் உள்ளன. இப்பகுதியில் விளையும் தேங்காய் விற்பனைக்காக ஈரோடு மணல்மேடு பகுதியில் உள்ள தேங்காய் சந்தைக்கு கொண்டு வரப்படும். கடந்த ஆண்டு வரையிலும் தேங்காய் விலை குறைந்து காணப்பட்டது.

கிடுகிடு விலை உயர்வு
மழை பொய்த்துப் போய் கடும் வறட்சியால் தென்னை மரங்களின் காய்ப்புத்திறன் குறைந்ததால் தேங்காய் விளைச்சல் குறைந்து போனது. இதனால் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முன்பு ரூ.4க்கு விற்ற தேங்காயின் விலை 8க்கும், ரூ.5க்கு விற்ற தேங்காய் ரூ.10 முதல் 12 வரையிலும் ரூ.8க்கு விற்ற தேங்காய் ரூ.16 முதல் 20 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு சந்தை
சென்னைக்கு பொள்ளாச்சி மற்றும் நாகர்கோவில் போன்ற இடங்களில் இருந்து ஒரு நாளைக்கு சராசரியாக 40 முதல் 50 லாரிகளில் தேங்காய் வந்து இறங்குகிறது. ஆனால், இப்போது, ஒரு நாளைக்கு சராசரியாக 10 லாரிகளில் தான் வருகிறது என்று கோயம்பேடு சந்தையில் தேங்காய் வியாபாரி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதி வரையில், சின்ன தேங்காய் 5ரூபாய் முதல் 8ரூபாய், நடுத்தர சைஸ் தேங்காயின் விலை 10 முதல் 12 ரூபாய், பெரிய சைஸ் தேங்காயின் விலை 15 ரூபாய் என்ற அளவில் தான் விற்பனை ஆனது.

மதுரை மாவட்டம் நிலவரம்
சோழவந்தான் குருவித்துறை, மண்ணாடிமங்கலம், கருப்பட்டி, நாச்சிக்குளம், திருவேடகம், மேலக்கால், தேனுார், விக்கிரமங்கலம் உட்பட 40க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி விவசாயம் நடக்கிறது. இங்கு டிசம்பர் முதலே முதல் தேங்காய் விலை உச்சத்தில் உள்ளது. விலை அதிகரித்தாலும் இத்தருணத்தில் உற்பத்தி குறைந்ததால் கூடுதல் விலை கிடைத்தும் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காது விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.

தைப்பூசம் எதிரொலி
தேங்காய் வரத்து குறைந்துள்ள நிலையில் தைப்பூசம் திருவிழாவும் இணைந்துள்ளதால் பழனி உள்ளிட்ட ஆலயங்களில் அதிக விலை கொடுத்தே தேங்காய்களை வாங்க வேண்டியுள்ளது. சாதாரண சிதறு தேங்காயே 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அர்ச்சனை செட் 150 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.

தேங்காய் சட்னிக்கு தடா
தேங்காய் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் வீடுகளில் தேங்காய் பயன்பாட்டினை குறைத்துக் கொண்டுள்ளனர். இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி எங்கம்மா என்று கேட்டால், பருப்பு விலைதான் கம்மி இனி சாம்பார் மட்டும்தான் என்று அடுப்பங்கரையில் இருந்து சத்தம் மட்டுமே வருகிறது. சத்தம் போடாமல் பல கணவர்கள் இட்லியை காலி செய்யும் நிலையே நிலவுகிறது.
கவுண்டமணி பாணியில யாராவது தேங்காய்குள்ள பாம் இருக்குன்னு புரளியை கிளப்பினாத்தான் விலை குறையுமோ?












Click it and Unblock the Notifications