டீசல் விலை லிட்டருக்கு 95 பைசா உயர்ந்தது... சென்னையில் 99 பைசா உயர்வு!
டெல்லி: டீசல் விலை லிட்டருக்கு 95 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
அதேவேளையில், பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைப் பொருத்து, மாதந்தோறும் 1 மற்றும் 15-ஆம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கும்.
அதன் அடிப்படையில், டெல்லியில் ரூ.44.95-ஆக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலையை ரூ.45.90-ஆக உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் வியாழக்கிழமை முடிவு செய்தன. இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1-ஆம் தேதி டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் வரிகளின் அடிப்படையில் டீசல் விலை மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடுகிறது. ஒப்பீட்டுக்கு டெல்லி விலையை கணக்கில் எடுக்கப்படுகிறது.
சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 99 காசுகள் உயர்ந்துள்ளது. லிட்டருக்கு 46 ரூபாய் 8 காசாக இருந்த டீசல் விலை, இப்போது 47 ரூபாய் 7 காசாக உயர்ந்தது.
கொல்கத்தாவில், ரூ.48.71 ஆக இருந்த டீசல் விலை, 81 காசு உயர்ந்து, ரூ.49.52 ஆனது.
மும்பையில் டீசல் விலை ரூ.1.01 உயர்ந்தது. அங்கு ரூ.52.08-ல் இருந்து ரூ.53.09 ஆக உயர்ந்தது.