டீசல் விலை ரூ. 3.37 குறைப்பு.. விலை நிர்ணயத்தையும் எண்ணைய் நிறுவனங்களிடம் கொடுத்தது மத்திய அரசு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் 3.37 குறைத்துள்ளது.
இந்த விலைக் குறைப்பு உத்தரவானது நள்ளிரவு முதல் அமலாக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இனிமேல் டீசல் விலை நிர்ணயத்தையும் பெட்ரோலிய நிறுவனங்களே எடுக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே பெட்ரோல், விலை போல இனி டீசல் விலையும் கச்சா எண்ணெய் நிலவரத்திற்கேற்ப அவ்வப்போது கூடும், குறையும்.
டெல்லியில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

19 முறை உயர்வு:
எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கடந்த 2013 ஆம்ஆண்டில் இருந்து ஒவ்வொரு மாதமும் 50 பைசா வீதம் கடந்த 20 மாதங்களில் 19 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சந்தை விலைக்கு மாற்றம்:
டீசல் விலையை சந்தை விலைக்கு ஏற்ப மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டதால், இனி டீசல் விலையும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆளுநரும் வேண்டுகோள்:
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனும் டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்வதற்கு பதிலாக சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிக விலையில் விற்பனை:
விலை குறைப்பை ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் ஆயில் போன்றவை நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தன. மத்திய அரசு மானிய விலையில் டீசல் விற்கும்போது இவர்கள் அதிக விலையில் விற்க வேண்டி இருந்தது. அந்த பிரச்சனைகளுக்குத் தீர்வாக இந்த விலைக் குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

லிட்டர் விலை:
இந்திய அளவில் டீசலானது சராசரியாக லிட்டர் 55.60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தலால் தாமதம்:
இவ்விலைக் குறைப்பானது, மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில தேர்தல்களின் காரணமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் கேஸ் மானியம்:
இதேபோல சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு கொடுக்கப்படும் மானியத்தை நேரடியாக பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டம் நவம்பர் 10 ஆம் தேதி முதல் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications