அமெரிக்காவால் தங்கத்தின் மதிப்பே சரியுமாம்.. அப்போ நம்ம சேமிப்பு என்னவாகும்? ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் ஏற்கனவே ஆர்வமாகத் தங்கம் வாங்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், சர்வதேச அரசியல் குறிப்பாக அமெரிக்காவில் நடக்கும் சில சம்பவங்களால் தங்கத்திற்கான மதிப்பு குறையலாம் என்று சிலர் கூறி வரும் நிலையில், அதற்குப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கத்தை அளித்துள்ளார்.
தங்கம் விலை கடந்தாண்டு புயல் வேகத்தில் பாய்ந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். மத்திய அரசு இறக்குமதி வரியைக் கணிசமாகக் குறைத்த பிறகும் கூட கிட்டதட்ட 20%க்கு மேல் அதன் விலை அதிகரித்து இருந்தது.

தங்கம்:
இதனால் சேமிப்பிற்குத் தங்கம் சரியாக இருக்கும் எனப் பலரும் அதை வாங்கினார். இந்தாண்டும் கூட தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வரை 3 நாட்களில் மட்டும் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.150 வரை உயர்ந்துள்ளது. இந்தாண்டும் கூட தங்கம் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்கச் சர்வதேச அளவில் அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இதுபோல வலுவடையும் போது தங்கம் மற்றும் இதர நாடுகளின் கரன்சி மதிப்புகள் குறையும்.. இப்படித் தொடர்ந்து டாலர் மதிப்பு வலுவடையும் போது நீண்ட கால நோக்கில் தங்கத்தின் மதிப்பு குறையுமோ என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். அதாவது நீண்ட கால நோக்கில் டாலர் மதிப்பு ஏறுவதால் தங்கம் விலை குறையும் என்று சிலர் கூறி வருகிறார்கள். இதற்கான பதிலை ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்:
அவர் தனது யூடியூப் பக்கத்தில், "இல்லை, எப்போதும் நீண்ட கால நோக்கில் டாலரை விடத் தங்கம் தான் சிறப்பாகச் செயல்படும். தங்கம் தான் நிலையானது. 1971ம் ஆண்டு டாலர் மதிப்பில் கூட ஒரு அவுன்ஸ் தங்கம் 36 டாலராக இருந்தது. ஆனால், இப்போது அது கிட்டதட்ட 2600 டாலராக இருக்கிறது. எனவே, தங்கம் நிலையானது. டாலர் உட்பட மற்ற கரன்சிகள் அதற்கு எதிராக விழவே செய்யும்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய 200 ரூபாயாக இருக்கும் போது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 20,000ஆக இருக்கும். அப்போது நான் சொன்னது போல உங்களிடம் 400 கிராம் தங்கம் இருந்தது என்றால் உங்கள் கைவசம் ரூ.80 லட்சம் இருக்கிறது என்று அர்த்தம். அப்போது ரூ.80 லட்சத்தின் மதிப்பு தற்போதைய ரூ.80 லட்சமாக இருக்காது என்றாலும் கூட அது கணிசமான தொகையாகவே இருக்கும்.
உயரவே செய்யும்:
நாம் எவ்வளவுக்கு எவ்வளவு சின்ன வயதில் சேமிக்கத் தொடங்குகிறோம் என்பது முக்கியம். 25 வயதில் நீங்கள் பணத்தைச் சேமிக்கத் தொடங்கினால்.. 38 வயதில் ஒரு கோடி ரூபாய் சேமித்துவிடலாம்.. 50ஆவது வயதில் ரூ. 4 அல்லது 5 கோடி இருக்கும். முதல் ஒரு கோடி சேர்ப்பது மட்டுமே கடினம்.. மற்றது ஈஸியாக வந்துவிடும். அப்போதும் இது பெரிய பணம் தான். நீங்கள் எவ்வளவு இலக்கை வைத்திருந்தாலும் அதைச் சிறு சிறு படிகளாகவே எடுத்து வைத்து அடைய முடியும்" என்றார். அதாவது டாலர் மதிப்பு உயர்ந்தாலும் கூட அதைத் தாண்டி தங்கத்தின் மதிப்பு அதிகரித்து இருக்கும் என்பது அவரது கருத்தாகும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications