பெங்களூர் வேண்டாம்.. ஓசூர் தான் பெஸ்ட்.. கர்நாடக நிறுவனம் எடுத்த முடிவால் ரூ.4000 கோடி ஜாக்பாட்!
கர்நாடகாவை தலைமையிடமாகக் கொண்ட ஏக்யூஸ் (Aequs) நிறுவனம், தமிழ்நாட்டில் ரூ.4,000 கோடி முதலீட்டில் ஏரோ இன்ஜின் கூறுகள் தயாரிப்பு தொழிற்பூங்காவை அமைக்கும் மாஸ்டர் பிளானை வெளியிட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் முழுமையான செங்குத்தாக ஒருங்கிணைந்த விமான இன்ஜின் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏக்யூஸ் நிறுவனம், பிப்ரவரி 2026-இல் முந்தைய ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, ஓசூர் அருகே சூளகிரி SIPCOT தொழிற்பூங்காவில் 250 ஏக்கர் பரப்பளவில் ஏரோ இன்ஜின் உதிரிபாகங்கள், லேண்டிங் கியர் அமைப்புகள், ultra-precision machining உற்பத்தி மற்றும் மேம்பட்ட விண்வெளி அமைப்புகள் தயாரிக்கும் சுற்றுச்சூழலை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் ஏக்யூஸ் நிறுவனம் நேரடியாக ரூ.1,900 கோடி முதலீடு செய்யும். மீதமுள்ள ரூ.2,100 கோடி உலகளாவிய விநியோகச் சங்கிலி கூட்டாளிகள் மற்றும் துணை நிறுவனங்களால் முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது 4000 கோடி ரூபாயில் 250 ஏக்கரில் இத்தொழிற்சாலை எப்படி அமைக்கப்படுகிறது என்பதற்கான பிளான்-ஐ ஏக்யூஸ் (Aequs) நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
டிரோன் உற்பத்திக்கு கூட்டு முயற்சி
ஜனவரி 2026-இல் ஏக்யூஸ் நிறுவனம், அக்கல் இந்தியா மற்றும் வாகஸ் டிஃபென்ஸ் டெக் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் ஆளில்லா விமானங்கள் (UAVs) மற்றும் அதற்கு தொடர்புடைய பொருட்களை தயாரிக்கவும், ஒன்றுகூட்டி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் முழுமையான டிரோன் உற்பத்தி சப்ளை செயின் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2028ல் உற்பத்தி தொடக்கம்
இந்த தொழிற்பூங்கா அடுத்த ஆண்டு இயக்கத்திற்கு வரும் என்றும், 2028-இல் ஏற்றுமதிகளைத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 7,000 உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் ஓசூர்?
ஏக்யூஸ் நிறுவனம் தனது தலைமையகம் கர்நாடகாவின் பெலகாவியில் இருந்தாலும், ஓசூரில் இருக்கும் தொழில்துறை திறன்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. இந்த வளாகம், உலகளாவிய விமான உற்பத்தி நிறுவனங்களுக்கு (OEMs) தடையற்ற ஏற்றுமதி தளமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம், தமிழ்நாட்டின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் விமான இன்ஜின் உற்பத்தித் துறையில் சுயசார்பை அடைவதற்கான முக்கிய அடியாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications