நாட்டின் ஜிடிபி 3வது காலாண்டில் 7%... நிதி, கட்டுமானத்துறைகள் கடும் பாதிப்பு
நடப்பு நிதி ஆண்டின் 3வது காலாண்டில் ஜிடிபி (ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி ) 7% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
டெல்லி: நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 2016-17ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 7 சதவிகிதம் ஆக மத்திய புள்ளியியல் துறை கூறியுள்ளது.
அதே நேரத்தில் கட்டுமானத்துறை, நிதி, ரியல் எஸ்டேட் துறைகளின் உற்பத்தி விகிதம் கடுமையாக குறைந்துள்ளது. உற்பத்தித்துறை, சுரங்கத்துறைகளின் உற்பத்தி விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 8ஆம் தேதியன்று மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். உயர்பண மதிப்பு நீக்க அறிவிப்பினால் நாடு முழுவதும் பணப்பஞ்சம் ஏற்பட்டது.
பணத்திற்காக வங்கி வாசலிலும், ஏடிஎம் வாசலிலும் மணிக்கணக்கில் காத்திருந்தனர். 100 நாட்கள் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். உயர்பணமதிப்பு நீக்க அறிவிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்தது.

ஜிடிபி
2016 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்களில் ஜிடிபி 7% ஆக உள்ளதாக மத்திய புள்ளியல்துறை கூறியுள்ளது. உயர்பணமதிப்பு நீக்க அறிவிப்பு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை பாதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைதுறை
வேளாண் வளர்ச்சி விகிதம் 6% ஆகா அதிகரித்துள்ளது. வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பும் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 7.1 சதவிகிதமாகவும், இரண்டாம்
காலாண்டில் 7.3 சதவிதமாகவும் இருந்தது.

சுரங்கம் - உற்பத்தித்துறை
சுரங்கம் மற்றும் குவாரி துறையின் வளர்ச்சி 7.5 சதவிகிதமாக உள்ளது. அதேபோல உற்பத்தி துறைகளின் வளர்ச்சி 8.3 சதவிகிதமாக உள்ளது. உற்பத்தித் துறையின் வளர்ச்சி முதல் காலாண்டில் 9.1 சதவிகிதமாக இருந்தது. இரண்டாம் காலாண்டில் இது 7.1
சதவிகிதமானது.

பொது நிர்வாகம் - பாதுகாப்பு
பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் பிற சேவை துறைகளின் வளர்ச்சி 11.9 சதவிகிதமாக அதிகரித்து உள்ளதாக புள்ளியல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இது எதிர்பாராத வளர்ச்சி என்றும் கூறப்பட்டுள்ளது.

ஹோட்டல் - போக்குவரத்து
வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து துறைகளின் வளர்ச்சி 7.2 சதவிகிதமாக உள்ளது. மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை துறைகளின் வளர்ச்சி 6.8 சதவிகிதமாக உள்ளது.

கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகள்
அதே நேரத்தில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளான கட்டுமானத்துறை, ரியல் எஸ்டேட் துறைகளின் வளர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்துறையின் வளர்ச்சி விகிதம் 2.7% ஆக உள்ளது. நிதி மற்றும் ரியல்
எஸ்டேட் துறைகளின் வளர்ச்சி 3.1 சதவிகிதமாக உள்ளது. இரண்டாம் காலண்டில் நிதித்துறையில் 8.2 சதவிகித வளர்ச்சி காணப்பட்டது.

7.1% ஆக இருக்கும்
நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி - மார்ச்) வளர்ச்சி விகிதம் 7.1% சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயர் பணமதிப்பு நீக்க அறிவிப்பு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கும் என்று கூறப்பட்டது. 6.6
சதவிகிதமாக குறையும் என்றும் கூறப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்குப் மாறாக உள்நாட்டு உற்பத்தி நிலையாகவே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications