தங்கம் விலை 15% வரை.. இரண்டே மாதங்களில் சரியுமாம்.. அப்போ ரேட் ரூ.8500க்கு கீழ் போகுமே! குட் நியூஸ்
சென்னை: இந்தியாவில் பொதுமக்கள் எப்போதும் தங்கத்தைத் தான் முதல் முதலீடாகக் கருதுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், தங்கம் விலை கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், அதில் பொதுமக்கள் முதலீடு செய்ய முடியாமல் சிரமப்பட்டனர். இதற்கிடையே தங்கம் விலை அடுத்த இரண்டு மாதங்களில் 12 முதல் 15 சதவீதம் வரை குறையும் என்று குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நமது நாட்டில் அனைத்து தரப்பினரும் தங்கத்தைச் சேமித்து வைத்துக் கொள்வார்கள். கலாச்சார ரீதியாகத் தங்கம் நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதைத் தாண்டி தங்கம் பிரதான சேமிப்பாகவும் இருக்கிறது. தங்கத்தை எளிதாகப் பணமாக மாற்றலாம்.. அதன் மதிப்பு சரியாது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் தங்கத்தை ஆர்வமாக வாங்குகிறார்கள்.

தங்கம் விலை
ஆனால், கொரோனா வந்த பிறகு பறக்கத் தொடங்கிய தங்கம் விலை, அதன் பிறகு குறையவே இல்லை. தங்கம் விலை தொடர்ச்சியாக உயரப் பல காரணங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,980க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து உயர்வதால் மக்கள் அதை வாங்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
15% வரை சரியும்
இதற்கிடையே தங்கத்தின் விலை குறித்து குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் முக்கிய கணிப்பு ஒன்றைச் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் தங்கத்தின் விலை அடுத்த இரண்டு மாதங்களில் 12 முதல் 15 சதவீதம் வரை குறையும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் இப்போது வரை தங்கம் விலை 34 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் நிச்சயமற்ற சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாகக் கருதியதால், தங்கத்தின் தேவை அதிகரித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் சீனாவுடனான வர்த்தகப் போர் இதில் பிரதான காரணம். இது தவிர ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல் போர் ஆகியவையும் முதலீட்டாளர்களைத் தங்கத்தை நோக்கித் திருப்பியது.
குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் கணிப்பு
இந்தச் சூழலில் தான் தங்கம் விலை குறைந்துள்ளது என குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் கணித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கணிப்பில், "தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. டாலர் மதிப்பில் தங்கம் விலை அடுத்த இரண்டு மாதங்களில் 12 முதல் 15 சதவீதம் வரை குறையும். அதேநேரம் நீண்ட கால முதலீட்டில் தங்கம் சிறந்த முதலீடாகவே இருக்கும். எனவே, உங்கள் போர்ட்ஃபோலியோவில் கணிசமான சதவீதத்தைத் தங்கத்திற்கு ஒதுக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில காலமாகவே இந்தியாவில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. இந்தச் சூழலில் தான் அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் தெரிவித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மார்னிங்ஸ்டார் வல்லுநர்
அதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங்ஸ்டார் வல்லுநரும் கூட அடுத்த சில ஆண்டுகளுக்குள் தங்கம் விலை 38 சதவீதம் வரை குறையும் என்று கணித்துள்ளார். அவர் சொன்னது அப்படியே நடந்தால் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ. 56,000 என்ற ரேஞ்சிற்கு போய்விடும். தங்கத்தின் உற்பத்தி அதிகரிப்பு தொடங்கிப் பல காரணங்களை இதற்கு அவர் பட்டியலிட்டிருந்தார்.
நல்லதுதான்
தங்கம் விலை உயர்ந்ததால் இந்தியாவில் அதன் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்தச் சூழலில் தான் இரு முக்கிய நிறுவனங்கள் தங்கம் விலை சரியும் எனக் கணித்துள்ளன. அப்படி தங்கம் விலை சரிந்தால், அதன் விற்பனை மீண்டும் அதிகரிக்கும். இது இந்திய நகைக்கடை உரிமையாளர்களுக்கு நல்ல செய்தியாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், மக்களுக்கும் கூட தங்கம் விலை சரிந்தால் அதை வாங்கச் சிறந்த வாய்ப்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications