நெருங்கி வரும் தீபாவளிப் பண்டிகை - ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்குமா ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் மத்திய அரசும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்நோக்கி உள்ளது.
டெல்லி: குறைந்து வரும் பணவீக்க விகிதம். பொருளாதார மந்த நிலைஇ மற்றும் நெருங்கி வரும் பண்டிகை காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் மத்திய அரசும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்நோக்கி உள்ளது.
உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் சற்று தள்ளாடிய பொருளாதார வளர்ச்சியானது கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பின் காரணமாக மேலும் தள்ளாடத் தொடங்கியது. இதனால், மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லா அளவான 5.7 சதவிகித அளவை எட்டியது.
உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு மத்திய அரசு, ரொக்க நடவடிக்கையை தவிர்த்துவிட்டு அதற்கு மாற்றாக மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தது.

டிஜிட்டல் பணபரிமாற்றம்
ரொக்க பரிவர்த்தனையே கறுப்பு பண நடமாட்டம் மற்றும் கள்ள பொருளாதாரத்திற்கு வழி வகுக்கும் என்பதால் தான் மின்னணு பரிவர்த்தனையே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. ஆனாலும், மின்னணு பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கு ஏற்ற தொழில் நுட்ப வசதியும் கட்டமைப்பும் முழுமையாக நிறைவேற்றப்படாததால், பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் எந்தப்பக்கம் செல்வது என்று குழப்பத்தில் தவித்தனர்.

உள்நாட்டு உற்பத்தி சரிவு
தொழில் நிறுவனங்களும் விவசாயிகளும் உற்பத்திக்கும் விவசாய விலைபொருட்களுக்கும் தேவையான மூலப்பொருட்களை வாங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டது. இதனாலும் கடந்த ஆறு மாதங்களில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சரியத் தொடங்கியது. இதன் தாக்கம் கடந்த மாதம் வெளியிடப்பட்ட இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டின் பொருளாதார அறிக்கையில் வெளிப்பட்டது.

கடும் சரிவை சந்தித்த ஜிடிபி
கடந்த ஜூன் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்து கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவான 5.7 சதவிகித அளவை எட்டியது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் 7.9 சதவிகிதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

சரக்கு மற்றும் சேவை வரி
உயர்பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்றும் அதற்கு ஜிஎஸ்டி வதிவிதிப்பு முறை அமல்படுத்தப்படவேண்டும் என்று போக்கு காட்டியே ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை அமல்படுத்தியது.

ஆர்பிஐ வட்டி விகிதம்
தற்போது நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சரிவடைந்ததால், அதை சீர்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கோள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன் ஆரம்பமாக வட்டி விகிதத்தை குறைக்கு ஆயத்தமாகி வருகிறது.
ஏனென்றால் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால்தான் பணப்புழக்கம் அதிகரிக்கும், அதனால் அனைவருக்கும் வாங்கும் திறன் அதிகரிக்கும்.

பணத்தட்டுப்பாடு
இதன்மூலம் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கும். கூடவே தீபாவளிப் பண்டிகையும் நெருங்கி வருவதால், அனைத்து தரப்பினரும் பணத்தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர், இதனை உணர்ந்தே மத்திய அரசும் வட்டி விகிதத்தை குறைக்க முனைப்பு காட்டி வருகின்றது.

நிதிக்கொள்கை கூட்டம்
வட்டி குறைப்பு என்பது மத்திய ரிசர்வ் வங்கியின் கையில் உள்ளதால், மத்திய அரசும் ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்ப்பது போலவே மத்திய அரசும் எதிர்நோக்குகிறது.

ரிசர்வ் வங்கி வட்டிக்குறைப்பு
இதுபற்றி கருத்து தெரிவித்த பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரிகள், ரிசர்வ் வங்கியானது வட்டி குறைப்பு நடவடிக்கையில் என்னவிதமான உத்தியை மேற்கொள்ளும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. என்றாலும் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டே பணவீக்க விகிதம் 4 சதவிகிததத்திற்கு கீழே இருக்கும் வகையில், வட்டி குறைப்பு நடவடிக்கையில் சற்று கனிவுடனும் நெகிழ்வுத் தன்மையுடனும் நடந்துகொள்ளும் என்று தெரிகிறது.

எதிர்பார்ப்பில் மக்கள்
இதுகுறித்து மார்கன் ஸ்டேன்லி ஆய்வு நிறுவனமும், மத்திய ரிசர்வ் வங்கியானது உயர்ந்து வரும் பணவீக்க விகிதத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், சிறிதளவாவது வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தன்னுடைய ஆய்வறிக்கையில் கருத்து தெரிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம்
மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரிகளும், ரிசர்வ் வங்கியானது வரும் நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக கூறினர். கடந்த ஆகஸ்டு மாதத்தில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு அளிக்கும் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைத்து 6 சதவிகிதமாக நிர்ணயித்தது. இது கடந்த பத்து மாதங்களில் நடந்த முதல் வட்டி குறைப்பு நடவடிக்கையாகும்.

பண வீக்க விகிதம்
அதே சமயத்தில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் சில்லறை பணவீக்க விகிமானது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவாக 3.36 சதவிகிமாகவும், ஜூலை மாதத்தில் நுகர்வோர் பணவீக்க விகிதம் 2.36 சதவிகிமாகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications