ஹேப்பி பர்த்டே ஜிஎஸ்டி... கொண்டாடும் மத்திய அரசு - சாதகமா? பாதகமா?
ஜி.எஸ்.டி. வரி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி அமலுக்கு வந்தது. நேற்றுடன் இந்த வரி முறை அமலுக்கு வந்து ஒரு ஆண்டு ஆகிறது.
டெல்லி: நாடு முழுவதும் ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் ஓராண்டு காலம் நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் விதமாக ஜூலை ஒன்றாம் தேதியை ஜிஎஸ்டி தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒரே தேசம் ஒரே வரி என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதியன்று மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டி முறை அறிமுகப்படுத்தி ஓராண்டு நிறைவடைவதை கொண்டாடும் விதமாக ஜூலை ஒன்றாம் தேதியை ஜிஎஸ்டி தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கருத்து பதிவிட்டுள்ளார். ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையால், உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், தொழில்முனைவோருக்கு எளிமையாக அமைந்துள்ளதாகவும், சிறு குறு தொழிலதிபர்களுக்கு பலனளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஓராண்டு கொண்டாட்டம்
நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்பட்டு ஓராண்டு வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது இந்திய மக்கள் ஆக்கப்பூர்வமான சீர்திருத்த நடவடிக்கைகளை எப்போதும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை இந்த உலகுக்கு உணர்த்தியுள்ளது. இதுபோன்ற வரி சீர்திருத்தங்களுக்கு வரவேற்பளித்துள்ள நம் மக்கள் பிற நாட்டவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றனர்.
இ வே பில்
ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் இணையவழி ரசீது எனப்படும் இ-வே பில் நடைமுறை அமல்படுத்தப்பட்டதும் தடையில்லாத சரக்கு போக்குவரத்துக்குக்கு வழிவகுத்துள்ளது. மொத்தத்தில் புதிய வரி நடைமுறையானது நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதியாளர்கள், சிறு வர்த்தகர்கள், தொழில்முனைவோர், தொழில் நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் அதன் மூலமாகப் பயனடைந்து வருகின்றனர். அனைத்துக்கும் மேலாக விவசாயிகளுக்கும், சாமானிய நுகர்வோர்களுக்கும் ஜிஎஸ்டி சட்டம் நற்பயன்களை அளித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி விகிதங்கள் குறைப்பு
ஜூலை 1ஆம் தேதியன்று சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட போது, 4 விகிதங்களில் வரி முறை கொண்டு வரப்பட்டது. 28 சதவிகிதம், 18 சதவிகிதம், 12 சதவிகிதம், 5 சதவிகிதம் என 4 அடுக்கு முறைகளில் வரி விதிக்கப்பட்டது. பல ருட்களுக்கு வரிகளை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டதால் சுமார் 320 பொருட்களுக்கு வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன.
ஜிஎஸ்டி வரி வசூல்
ஜிஎஸ்டி மூலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.94 ஆயிரத்து 63 கோடியும், ஆகஸ்டு மாதம் ரூ.93 ஆயிரத்து 590 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ.93 ஆயிரத்து 29 கோடியும், அக்டோபர் மாதம் ரூ.95 ஆயிரத்து 132 கோடியும், நவம்பர் மாதம் ரூ.85 ஆயிரத்து 931 கோடியும், டிசம்பர் மாதம் ரூ.83 ஆயிரத்து 716 கோடியும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.88 ஆயிரத்து 929 கோடியும், பிப்ரவரி மாதம் ரூ.88 ஆயிரத்து 47 கோடியும், மார்ச் மாதம் ரூ.89 ஆயிரத்து 264 கோடியும், ஏப்ரல் மாதம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 458 கோடியும், மே மாதம் ரூ.94 ஆயிரத்து 16 கோடியும், வசூல் ஆகி உள்ளன. ஜூன் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ 95 ஆயிரத்து 610 கோடியாக உள்ளது.
வரி வருமானம் அதிகரிப்பு
ஒரு ஆண்டில் ரூ.12 லட்சம் கோடி வருமானம் வரும் என்று இலக்கு நிர்ணயித்து இருந்தனர். ஆனால், அதை விட அதிகமாகவே வருவாய் வந்துள்ளது. அதாவது ஒரு ஆண்டு முடிவில் ரூ.13 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருக்கிறது.எதிர்பார்த்ததை விட ரூ.1 லட்சம் கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்ததை விட அதிக வரி வசூல் கிடைத்துள்ளது. அதிக வரி கிடைத்திருப்பதால் அது மக்களுக்கு பயனடையும் வகையில் வரியை குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வரி குறையும்
வரி வருவாய் எதிர்பார்த்ததை விட ரூ.1 லட்சம் கோடி அதிகமாக வந்திருப்பதால் வரியை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக 28 சதவிகிதம் வரை வரி உள்ள பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 11 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே மக்களை கவரும் வகையில் இந்த வரி குறைப்பு இருக்கும்.
ஜிஎஸ்டியால் நன்மைகள்
ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டதால் அனைத்து மாநிலங்களிலும் ஒரே விகித வரி முறை வந்துள்ளது. மேலும் இதற்கு முன்பு 37 வகையான கணக்கு வழக்கு பாரங்களை தாக்கல் செய்ய வேண்டி இருந்தது. ஜிஎஸ்டி மூலம் அவற்றையும் எளிமையாக்கி ஒரே பாரத்தை தாக்கல் செய்யும் விகிதத்தில் கொண்டு வந்துள்ளோம். இதில் இன்னும் எளிமையை கொண்டு வரப்போகிறோம். வருமான வரி தாக்கலுக்கு எவ்வாறு ஒரே பாரத்தில் எல்லா தகவல்களும் இருக்கின்றனவோ அதேபோல் ஜிஎஸ்டியிலும் ஒரே பாரத்தை தாக்கல் செய்யும் வகையில் எளிமைப்படுத்த உள்ளோம். மேலும் இந்த வரிமுறைகள் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் அது வியாபாரிகளுக்கு எளிமையாக அமைகிறது என்று ஜிஎஸ்டி சேர்மன் அஜய்பூஷன் பாண்டே கூறியுள்ளார்.