இந்தியாவின் ஜிடிபி 6.5 சதவிகிதமாக சரிந்து 8% ஆக மீண்டு எழும்- ஐஎம்எப் கணிப்பு
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவிகிதமாக சரிந்து அடுத்த 5 ஆண்டுகளில் 8 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
டெல்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018 -19ஆம் நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவிகிதமாக சரிவடையும் என்று ஐஎம்எப் கணித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கான செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் டெல்லியில் அக்டோபர் 24ஆம் தேதியில் நடந்தது. அக்கூட்டத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டுமானம், வங்கித் துறையை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த மூன்று வருடங்களாகவே இந்தியப் பொருளாதாரமானது உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்கள் சிறப்பாகவே இருக்கின்றன.
சில நேரங்களில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது சில பின்னடைவுகள் துவக்கத்தில் இருக்கத்தான் செய்யும். அவை நீண்ட கால அடிப்படையில் மிகவும் பயனளிக்கக்கூடியவை என்றார்.
கூட்டத்தில் பேசிய பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளரான சுபாஷ் சந்திர கார்க் இதுகுறித்து மேலும் கூறுகையில், "நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறையை 3.2 சதவிகிதத்திலேயே வைத்திருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபற்றி டிசம்பர் மாதத்தில் மறுபரிசீலனை செய்யப்படும்.
அந்நிய செலாவணி கையிருப்பு
2014ஆம் ஆண்டிலிருந்தே பணவீக்க விகிதம் குறைந்து வருவதை நாம் காண்கிறோம். அது இந்த ஆண்டில் 4 சதவிகிதமாக இருக்கும். மேலும், அந்நியச் செலாவணிக் கையிருப்பு 400 பில்லியன் டாலர்களைத் தாண்டும். பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை தற்போது சீராகியுள்ளது. அது வளர்ச்சிப் பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளது என்று கூறியுள்ளார் சுபாஷ் சந்திர கார்க்.
ஐஎம்எப் கணிப்பு
இந்த கூட்டத்தில் ஐஎம்எப் கணிப்பு பற்றிய வரைபடம் வைத்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் விழுந்து பின்னர் மீண்டு எழும் என்று ஐஎம்எஃப் கணித்துள்ளது. 2018 -19ஆம் நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவிகிதமாக சரிவடையும் என்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் சீராக வளர்ச்சியடையும் ஜிடிபி 2021 - 22ஆம் நிதியாண்டில் 8 சதவிகித வளர்ச்சியை எட்டும் என்று ஐஎம்எப் கணித்துள்ளது. இது 2015-16ஆம் நிதியாண்டிற்கான வளர்ச்சி விகிதமாகும்.
இந்திய பொருளாதார வளர்ச்சி
கடந்த 2015-16ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவிகிதமாக பதிவானதன் மூலம் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடாக இந்தியா முன்னேறியது.
ஜிடிபி 7.1%
2016-17ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் 8 ஆக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்தது. ஆனால் பணமதிப்பு நீக்கத்தினால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் பாதிப்புக்கு ஆளானது. மார்ச் மாதம் முடிந்த 2016-17 நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% ஆக வளர்ச்சியடைந்துள்ளது.
ஜிடிபி இரட்டை இலக்கை எட்டும்
இந்திய உள்நாட்டு உற்பத்தி வரும் நிதியாண்டுகளில் சரிவடைந்து பின்னர் மீண்டு எழும் என்று ஐஎம்எப் கணித்துள்ளது. ஆனால் இந்திய நிதித்துறை அமைச்சகமோ இன்னும் 5 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரட்டை இலக்கத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. நம்பிக்கை தானே வாழ்க்கை... யார் கணிப்பு ஜெயிக்கிறது என்று பார்க்கலாம்.