வளர்ச்சியை நோக்கி ஜிடிபி.. இரண்டாம் காலாண்டில் 6.3 சதவிகிதம்
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 6.3% ஆக வளர்ச்சியடைந்துள்ளது
சென்னை: கடந்த 5 காலாண்டுகளாக குறைந்திருந்த ஜிடிபி விகிதம் நடப்பு நிதி ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் அதிகரித்து 6.3% ஆக அதிகரித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product)கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18 முதலாம் காலாண்டில் 5.7% ஆக குறைந்தது. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்து போனதற்கு எதிர்கட்சியினர் ஆளும் பாஜக அரசை கடுமையாக சாடினர்.
ஏனெனில் கடந்த ஆண்டு இதே காலத்தில் ஜிடிபி வளர்ச்சி 7.9 சதவீதமாக இருந்தது. தவிர மார்ச் காலாண்டின் வளர்ச்சி 6.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் காலாண்டு வளர்ச்சி சீனாவின் வளர்ச்சியை விடக் குறைவாகும். கடந்த காலாண்டில் சீனாவின் வளர்ச்சி 6.9 சதவீதமாக இருந்தது.
இரண்டாம காலாண்டு
இதனிடையே உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சியினால் ஜிடிபி விகிதம் 2017 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் அதிகரித்து 6.3% ஆக அதிகரித்துள்ளது. ஆனால், 2016-17-ல் செப்டம்பர் மாதம் முடிவடையும் காலாண்டில் ஜிடிபி 7.5% ஆக இருந்தது.
6.3% ஆக ஜிடிபி வளர்ச்சி
மத்திய புள்ளியியல் துறையின் தரவுகளின்படி, உற்பத்தித்துறை, மின்சாரம், எரிவாயு, நீர்விநியோகம், பிற பயன்பாட்டுச் சேவைகள், வாணிபம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை சார்ந்த சேவைத்துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாக ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.3% ஆக வளர்ச்சியடைந்துள்ளது.
மந்தமான நிலை
8 உள்கட்டமைப்புத் துறைகளான, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய துறைகள் 2016-ல் 7.1% வளர்ச்சி கண்டன. அக்டோபரில் சுமார் 8 முக்கியத் துறைகள் 4.7% என்ற குறைந்த வளர்ச்சி விகிதத்தில் சென்றன. காரணம் சிமெண்ட், எஃகு, சுத்திகரிப்பு துறைகள் ஆகியவற்றின் மந்தமான நிலையே காணப்பட்டது.
வளர்ச்சியும் சரிவும்
இந்த முறை தொழிற்துறை அமைச்சகம் இந்த உள்கட்டமைப்புத் துறைகளின் செப்டம்பர் வளர்ச்சி விகிதத்தை முன்னர் 5.2% என்று கணித்து பிறகு 4.7% ஆகக் குறைத்தது. வேளாண்மை, வனத்துறை, மீன்பிடித் துறை ஆகிய துறைகள் 1.7% வளர்ச்சியடைந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டை விட குறைவு
இன்று வெளியான அதிகாரபூர்வ தரவுகளின் படி சிமெண்ட் உற்பத்தி 2.7% குறைந்துள்ளது. எஃகு உற்பத்தித் துறையில் அவுட்புட் வளர்ச்சி கடந்த மாதம் 8.4% ஆகக் குறைந்துள்ளது, இது கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 17.4% ஆக இருந்தது. மொத்தமாக 8 முக்கியத் துறைகளில் வளர்ச்சி விகிதம் 3.5% ஆகக் குறைந்துள்ளது. தொழிற்துறை உற்பத்தியில் 8 முக்கியத் துறைகளின் பங்களிப்பு 40.27% என்பது குறிப்பிடத்தக்கது.
உரத்துறை வளர்ச்சி
அதே போல் சுத்திகரிப்புத் துறை உற்பத்தியும் மந்தமாகியுள்ளது, இது அக்டோபர் 2017-ல் 7.5% ஆக இருந்தது. இதுவும் 2016-ல் 12.6% ஆக இருந்தது. ஆனால் நிலக்கரித் துறை 3.90% வளர்ச்சிக் கண்டுள்ளது. உரத்துறை 3% வளர்ச்சி கண்டுள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுத்துறையிலும் முன்னேற்றம் உள்ளது.
ஜிடிபி 7.6 சதவிகிதமாக உயர்வு
கடந்த 2015-16ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவிகிதமாக பதிவானதன் மூலம் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடாக இந்தியா முன்னேறியது.
7.1% ஜிடிபி
2016-17ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் 8 ஆக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்தது. ஆனால் பணமதிப்பு நீக்கத்தினால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் பாதிப்புக்கு ஆளானது. மார்ச் மாதம் முடிந்த 2016-17 நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% ஆக இருந்தது.
ஐஎம்எஃப் கணிப்பு
இந்திய உள்நாட்டு உற்பத்தி வரும் நிதியாண்டுகளில் சரிவடைந்து பின்னர் மீண்டு எழும் என்று ஐஎம்எப் கணித்துள்ளது. ஆனால் இந்திய நிதி அமைச்சகமோ இன்னும் 5 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரட்டை இலக்கத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.