சென்னையில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு... கென்யா பங்கேற்க முதல்வர் அழைப்பு
சென்னை: சென்னையில் வரும் மே மாதம் நடக்க உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கென்யா நாட்டின் பங்களிப்பு இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-
சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை கென்யா நாட்டின் தொழில்நிறுவன மேம்பாட்டுத்துறை அமைச்சர் அடன் முகமது தலைமையில் அந்நாட்டு குழுவினர், 3-ந்தேதி (நேற்று) சந்தித்துப் பேசினர். அப்போது கென்யாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாசார உறவுகள் குறித்து முதலமைச்சர் பேசினார்.
கென்யாவில் வாழும் இந்தியர்கள், இந்த இரண்டு நாட்டின் நல்லுறவுக்கான பாலமாக இருப்பதாக முதலமைச்சர் கூறினார். கென்யாவுக்கு அதிக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் மருந்து, உருக்கு, வாகன உதிரிபாகங்கள் போன்றவை கென்யாவுக்கு ஏற்றுமதியாவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் மனித வளம் அதிகமாக இருப்பதாகவும், இங்கு நல்ல முதலீட்டு வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
பின்னர் பேசிய அடன் முகமது, தமிழகத்தில் மூன்று நாட்கள் தங்கி, கோவை மாவட்டத்தில் ஜவுளி ஆலைகள், பொறியியல் நிறுவனங்களை நேரில் பார்வையிட்டதாகக் கூறினார். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் தாராளமயமான வர்த்தக உறவால் கென்யாவில் உற்பத்தி மையங்களை உருவாக்கி, ஏற்றுமதி செய்யும் மற்ற நாட்டு நிறுவனங்களுக்கு கட்டணமும் விதிக்கப்படுவதில்லை. இதை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்தியாவுக்கான கென்ய நாட்டின் தூதர் பிளாரன்ஸ் வெச், சுற்றுலாத் துறையில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. சினிமா படப்பிடிப்புகள் அதிகளவில் நடைபெறும் இடமாக சென்னை விளங்குகிறது. கென்யாவும் படப்பிடிப்புகளை நடத்துவதற்கு அருமையான பகுதியாகும் என்று கூறினார்.
அழைப்பு:
சென்னையில் மே மாதம் 23, 24-ந்தேதிகளில் நடக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கென்யா பங்கேற்க வேண்டும் என்று கென்யா நாட்டு தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே.ராமானுஜம், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications