தமிழகத்தில் வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை “நோ” - வெள்ளிக்கிழமை வழக்கம்போல் இயங்கும்!
சென்னை: தமிழகத்தில் சரஸ்வதி பூஜை, மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வெள்ளிக் கிழமையன்று வங்கிகள் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதனால், வங்கிகள் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் செயல்படும். ஆயுத பூஜையை முன்னிட்டு புதன், வியாழன் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கிகளுக்கு வரும் 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை. 21 ஆம் தேதி ஆயுத பூஜை, 22 ஆம் தேதி விஜயதசமி, 23 ஆம் தேதி மொஹரம், 24 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை, 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. இந்த தொடர் விடுமுறை காரணமாக நேரடி வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்பட அனைத்து வங்கிகளுக்கும் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக வங்கிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசு தலைமை ஹாஜியின் தகவலைத் தொடர்ந்து மொஹரம் தினத்தின் விடுமுறையை வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்கு மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம்போல செயல்படும்.
இதேபோல், வங்கிகள் அனைத்தும் வரும் வெள்ளிக்கிழமை செயல்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் சனிக்கிழமை 4 ஆவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.