ஜிஎஸ்டி வரி: செப்டம்பரில் 39.4 லட்சம் பேர் மட்டுமே ரிட்டன் தாக்கல்
செப்டம்பர் மாதத்தில் 39.4 லட்சம் பேர் ஜிஎஸ்டி வரி படிவம் தாக்கல் செய்துள்ளனர் என்றும் ஆனால் இது அரசு எதிர்பார்த்த எண்ணிக்கையை விடக் குறைவுதான் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
டெல்லி: செப்டம்பர் மாதத்தில் 39.4 லட்சம் பேர் வரி படிவத்தை தாக்கல் செய்துள்ளனர். இது ஆகஸ்ட் மாதத்தை விடச் சற்று அதிகமாகும். ஆகஸ்ட் மாதத்தில் 37.6 லட்சம் பேராக இருந்தது. இந்த மாதம் எதிர்பார்த்ததை சற்றே குறைவுதான் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் வர்த்தகர்களும் தொழில்துறையினரும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல ஜிஎஸ்டிஎன் வரி முறை அமல்படுத்தப்பட்ட புதிதில் சற்று தடுமாறினாலும், அனைவரும் விரைவில் புரிந்துகொண்டு தங்களின் வர்த்தக நடவடிக்கைகளை அதற்கேற்ப மாற்றிக்கொண்டனர்.
ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு மாதமும் தொழில் நிறுவனங்கள் கட்டாயமாக வரித்தாக்கல் செய்ய வேண்டும்.

ஜிஎஸ்டிஎன் இணையதளம்
மத்திய அரசும் வர்த்தகர்கள் மற்றம் தொழில்துறையினரின் சிரமங்களை புரிந்துகொண்டு அவர்களை ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்கான கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு(Input Tax Credit) மற்றும் நிகர வரி போன்றவற்றை ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு செப்டம்பர் 20ஆம் தேதிவரை கால அவகாசம் அளித்தது.

3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு
இணக்க முறையில் வரி செலுத்தும் சிறு வணிகருக்கான உச்ச வரம்பு ரூ. 75 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு கீழ் வணிகம் புரிவோர் 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்யலாம் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

ஜிஎஸ்டிஆர் 3 பி படிவம் தாக்கல்
இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் 39.4 லட்சம் பேர் ஜிஎஸ்டிஆர் 3 பி படிவத்தை தாக்கல் செய்துள்ளனர். இது ஆகஸ்ட் மாதத்தை விடச் சற்று அதிகமாகும். ஆகஸ்ட் மாதத்தில் 37.6 லட்சம் பேர் ஜிஎஸ்டிஆர் 3 பி படிவம் தாக்கல் செய்துள்ளனர்.

மாதாந்திர படிவம் தாக்கல்
செப்டம்பர் மாதத்திற்கான படிவம் தாக்கல் செய்ய இறுதி நாளாக கடந்த வெள்ளிக்கிழமை அதாவது அக்டோபர் 20ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த மாதத்தில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று மதிப்பிட்டிருந்தோம். இருப்பினும் அது சற்று குறைந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல மாதாந்திர படிவம் தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கையும் எதிர்பார்ப்பை விடச் சற்று குறைவாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications