பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா?
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. தந்தையின் பெயருடன் தனது பெயரை இணைத்தவர்களுக்கே குழப்பம் நீடிக்கிறது.
டெல்லி: பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளது. ஆனால் பல்வேறு குழப்பம் காரணமாக இரண்டையும் இணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாவிட்டால் செல்லாமல் போகும் அபாயம் எழுந்துள்ளது.
கறுப்புப் பணம் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முதல் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வங்கி கணக்குடன் பான் எண், ஆதார் எண் ஆகியவற்றை இணைக்க அறிவுறுத்தி வருகிறது.
இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதியில் இருந்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே ஜூலை 1ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது அவசியமாகிவிட்டது. மத்திய அரசு அறிவித்த பின்னர் 2கோடி பேர் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்துள்ளதாக வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.

இணைப்பதில் சிக்கல்
வருமான வரி இணையதளத்தில் இதற்கான வசதி உள்ளது. இதை தொடர்ந்து பலரும் தங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால், தொடர்ந்து முயற்சித்தும் தோல்வியடைகின்றனர்.

எதனால் குழப்பம்
வருமான வரி இணையதளத்தில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்யும்போது, தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் வசிப்பவர்கள்தான் இந்த சிக்கலை அதிகமாக சந்திக்கின்றனர். சாப்ட்வேர் புரிந்து கொள்ளாத காரணத்தால் இந்த குழப்பம் ஏற்படுகிறது. 20 ஆண்டுக்கு முன்பு பான் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு தந்தையின் பெயரை தொடர்ந்து விண்ணப்பதாரரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.

தந்தையின் பெயர்
பான் எண்ணில் தந்தையின் இனிஷியலும் அதை தொடர்ந்து பெயரும் இடம்பெற்றுள்ளது. ஒரு சிலர் தந்தையின் பெயரை முதலில் போட்டு பின்னர் தனது பெயரை போடுகின்றனர். தற்போது ஆதார் எண் பெற்றுள்ள பலரது பெயருக்கு பின்னால் தந்தையின் பெயரும் சேர்ந்துள்ளது. அதே நேரத்தில் பான் கார்டில் தந்தையின் பெயரை சேர்த்தவர்கள் ஆதார் எண்ணில் தந்தையின் இன்ஷியலை மட்டுமே சேர்த்துள்ளனர். இந்த இரண்டையும் இணைக்கும்போது பெயர் வேறுபாடு இருப்பதாக அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விடுகிறது.

சிக்கல் நீடிப்பு
பான் கார்டில் இனிஷியலுக்கு பிறகு புள்ளி மற்றும் சில சிறப்பு குறியீடுகள் ஏற்கப்படுகிறது. ஆனால், இவை ஆதாரில் ஏற்கப்படுவதில்லை. இதனால் இந்த இரண்டையும் சேர்க்கும் முயற்சி தோல்வியில்தான் முடிகிறது. பான் எண் அல்லது ஆதாரில் உள்ள பெயரை மாற்றுவதும் சிக்கலாக உள்ளது. ஏனெனில் அதற்கு உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாது.

பான் கார்டு ரத்தாகும் அபாயம்
பான் - ஆதார் எண் இணைக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளது. ஜூலை 1க்குள் இவற்றை இணைக்க முடியாவிட்டால் செல்லாமல் போகும் அபாயம் உள்ளது. இதுவரை மொத்தம் 25 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பான் எண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 2 கோடி பேர் மட்டுமே பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது. சாப்ட்வேர் குழப்பத்துக்கு வருமான வரித்துறையினர் தீர்வு காணாவிட்டால் பல கோடி பான் எண்கள் ரத்தாகும் அபாயம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications