காஞ்சிபுரம் இட்லி முதல் அழகர் கோவில் தோசை வரை தர நிர்ணய முத்திரை அவசியம்
கோவில் பிரசாதங்களுக்கு உணவு தர நிர்ணய முத்திரை கட்டாயம் என இந்து அறநிலையத் துறை அனைத்து கோயில் நிர்வாகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் விற்பனை செய்யப்படும் பிரசாதங்கள் அனைத்து உணவு தர நிர்ணய முத்திரை பெற்ற பிறகே விற்பனை செய்ய வேண்டும் என இந்து அறநிலையத் துறை சார்பில் கோயில் நிர்வாகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் வழங்கப்படும் லட்டு, முறுக்கு, வடை மற்றும் அதிரசம் உள்ளிட்ட பிரசாதங்கள் சாமிக்கு படைக்கப்பட்ட பின்னர், விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த பிரசாதங்கள் மக்களுக்கு தரத்துடன் கிடைப்பதற்கு வழி செய்யும் வகையில், இதற்கு உணவு தர நிர்ணய முத்திரை வழங்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தரமான பிரசாதம்
பழனி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்துக்கு உணவு தர நிர்ணய முத்திரை பெறப்பட்டிருக்கிறது. இந்த பிரசாதம் நிரப்பப்பட்ட பாட்டில்களில் பொருளின் எடை, விலை, FSSAI உரிமம் எண் உட்பட அனைத்து தகவல்களும் அச்சடிக்கப்பட்டிருக்கும். இதனால், காலாவதியான பிரசாதத்தைச் சாப்பிடுவதைத் தவிர்க்க முடியும்.
இறைவனுக்கு படையல்
கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அங்கு விற்பனை செய்யப்படும் அதிரசம், முருக்கு, தட்டை, அப்பம் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர். ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது. அதே போல கோவில் பிரசாதங்களுக்கும் தனி சுவை உண்டு.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க ச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும்
நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் படைக்கப்படுகிறது.
அழகர் கோவில் தோசை
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும் இரவில் பள்ளியறையின் போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம் செய்யப்படுகிறது. மதுரை அழகர் கோவில் தோசை பிரபலமானது. முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசைதான் இறைவனுக்கு படைக்கப்படுகிறது.
பக்தர்களுக்கு விநியோகம்
இந்த பிரசாதங்கள் இறைவனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இது தவிர கோவில் மடப்பள்ளிகளில் வடை, முருக்கு, லட்டு, அதிரசமும் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் தரத்துடன் இருக்க வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பம். எத்தனை நாட்களுக்கு முன்பு செய்யப்பட்டது எத்தனை நாட்களுக்குள் சாப்பிட வேண்டும் என்றும் பக்தர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்.
இந்து சமய அறநிலையத்துறை
இந்த நிலையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உணவு தர நிர்ணய முத்திரை பெற்ற பிறகுதான் அனைத்து கோயில்களிலும் பிரசாதம் விற்பனை செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகங்களுக்கு இந்து அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் குறிப்பிட்ட நிர்ணயப்படி தரமானதாக இருந்தால் மட்டுமே, அதற்கான முத்திரையை மத்திய உணவு தர ஆணையத்திடம் இருந்து பெற முடியும். இதனால் பக்தர்களுக்கு தரமான பிரசாதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.